Published : 17 Jul 2024 06:33 PM
Last Updated : 17 Jul 2024 06:33 PM

பிளஸ் 2-க்கு மாதம் ரூ.6,000, டிகிரிக்கு ரூ.10,000: மகாராஷ்டிராவில் இளைஞர் உதவித் தொகை திட்டம் அறிவிப்பு

மும்பை: வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் மகாராஷ்டிர இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக தயாராகி வருகிறது. ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணியும் தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு வாக்காளர்களை கவர, வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஏரளமான சலுகைகளை ஷிண்டே அரசு, பெண் வாக்காளர்களை கவரும் வகையில் 'லாட்லி பெஹ்னா யோஜனா' திட்டத்தை அறிவித்தது. தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை திட்டம் போல் தான் இதுவும். இதன்படி மாதம் ரூ.1,500 மகளிருக்கு வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்தது.

தற்போது அடுத்த அறிவிப்பாக இளைஞர்களுக்கான திட்டங்களை அறிவித்துள்ளார் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பில் 'லாட்லா பாய் யோஜனா' என்கிற திட்டத்தை வெளியிட்டார். இந்த திட்டத்தின்படி, 12-வது முடிந்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரமும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரமும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

இந்தத் திட்டம் தொடர்பாக பேசிய மகாராஷ்டிர முதல்வர் ஷிண்டே, "வேலையில்லா திண்டாட்டத்தை போக்க இதுமாதிரியான திட்டத்தை எந்த அரசும் இதற்கு முன்பு அறிவித்ததில்லை" என்று கூறினார். இந்த திட்டத்தின் படி, இளைஞர்கள் தொழிற்சாலையில் ஓராண்டு பயிற்சி அடைப்படையில் பணிக்கு அமர்த்தப்படுவர். அவர்கள் பயிற்சியின் அனுபவத்தில் திறமையான பணியாளர்களாக வேலைகளை பெறுவதே நோக்கம். அதன்படி, இந்த ஓராண்டு பயிற்சியின்போது இளைஞர்கள் மகாராஷ்ட்ரா அரசு ஊதியம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x