Published : 17 Jul 2024 12:12 PM
Last Updated : 17 Jul 2024 12:12 PM

சீரமைக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பில் கூட்டணி கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம்

புதுடெல்லி: நரேந்திர மோடி அரசு மூன்றாவது முறையாக பதவியேற்றதை அடுத்து நிதி ஆயோக் அமைப்பு சீரமைக்கப்பட்டுள்ளது. இதில், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு பிரதிநிதித்தவம் அளிக்கப்பட்டுள்ளது.

மோடியின் 3.0 அரசு, NITI ஆயோக் அமைப்பை நேற்று (ஜூலை 16) சீரமைத்தது. இதில், பாஜகவின் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உள்பட 15 மத்திய அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நிதி ஆயோக்கின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தொடர்கிறார். பொருளாதார நிபுணர் சுமன் கே. பெரி, தொடர்ந்து நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக இருப்பார் என அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானி வி.கே. சரஸ்வத், விவசாயப் பொருளாதார நிபுணர் ரமேஷ் சந்த், குழந்தைகள் நல மருத்துவர் வி.கே. பால் மற்றும் மேக்ரோ-பொருளாதார நிபுணர் அரவிந்த் விர்மானி ஆகியோரும் இதில் முழுநேர உறுப்பினர்களாக தொடர்ந்து இருப்பார்கள். அதிகாரபூர்வ உறுப்பினர்களாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் (பாதுகாப்பு), அமித் ஷா (உள்துறை), சிவராஜ் சிங் சவுகான் (விவசாயம்), நிர்மலா சீதாராமன் (நிதி) ஆகியோர் இருப்பார்கள். இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனத்தின் (National Institution for Transforming India-NITI) திருத்தப்பட்ட அமைப்புக்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி (சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்), ஜகத் பிரகாஷ் நட்டா (சுகாதாரம்), எச்.டி. குமாரசாமி (கனரக தொழில்கள் மற்றும் எஃகு), ஜிதன் ராம் மாஞ்சி (குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்), ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் (மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் பண்ணை) ஆகியோர் மறுசீரமைக்கப்பட்ட நிதி ஆயோக்கில் சிறப்பு அழைப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் வீரேந்திர குமார் (சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்), கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு (சிவில் விமானப் போக்குவரத்து), ஜுவல் ஓரம் (பழங்குடியினர் விவகாரங்கள்), அன்னபூர்ணா தேவி (பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு), சிராக் பாஸ்வான் (உணவு பதப்படுத்தும் தொழில்கள்) மற்றும் ராவ் இந்தர்ஜித் சிங். (புள்ளிவிவரம் மற்றும் நிரல் அமலாக்கம்) ஆகியோர் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமாரசாமி, மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்தவர், மாஞ்சி, இந்துஸ்தானி அவம் மோர்ச்சாவைச் சேர்ந்தவர், ராஜீவ் ரஞ்சன் சிங் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர், ராம்மோகன் நாயுடு தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர், பாஸ்வான் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) யைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

65 ஆண்டுகள் பழமையான திட்டக் குழுவை ரத்து செய்த மோடி அரசு, 2015-ம் ஆண்டு ​​‘நிதி ஆயோக்’ என அழைக்கப்படும் தேசிய நிறுவனத்தை உருவாக்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x