Published : 13 Jul 2024 01:40 PM
Last Updated : 13 Jul 2024 01:40 PM

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட திருத்தம்: ஓமர் அப்துல்லா விமர்சனம்

கோப்புப்படம்

ஸ்ரீநகர்: “ஜம்மு காஷ்மீர் மக்கள், அதிகாரமற்ற, தன்னுடைய உதவியாளரை நியமிக்கக் கூட துணைநிலை ஆளுநரிடம் கைகட்டிக் கெஞ்சும் ரப்பர் ஸ்டாம் முதல்வரை விட மிகவும் தகுதியானர்கள்” என்று அம்மாநில முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் சட்டம் 2019-ஐ திருத்தியிருக்கிறது. இதன் மூலம் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரத்தை வழங்குகிறது. இதனைத் தொடர்ந்து ஓமர் அப்துல்லா இவ்வாறு விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் ஓமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள பதிவில், “ஜம்மு காஷ்மீரில் தேர்தல் தள்ளிப் போவதற்கான மற்றுமொரு அறிகுறி. இதனால் தான் ஜம்மு காஷ்மீருக்கு முழுமையான மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்வது இந்தத் தேர்தலின் முன் நிபந்தனையாக இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மக்கள், அதிகாரமற்ற, தன்னுடைய உதவியாளரை நியமிக்கக் கூட துணைநிலை ஆளுநரிடம் கைகட்டிக் கெஞ்சும் ரப்பர் ஸ்டாம்ப் முதல்வரை விட மிகவும் தகுதியானர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கிய சட்டப்பிரிவு 370 -ஐ மத்திய அரசின் முடிவினை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பரில் உறுதி செய்ததது. மேலும் 2024 செப்டம்பர் 30-க்குள் ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக ஜம்மு காஷ்மீரில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, 2014 டிசம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தது. முந்தைய ஜம்மு காஷ்மீர் மாநிலம் கடந்த ஜூன் 2018-ம் ஆண்டு, மக்கள் ஜனநாயக கட்சி, பாரதிய ஜனதா கட்சி கூட்டணி முறிந்தது முதல் முதல்வரோ, அரசோ இல்லாமல் இருந்து வருகிறது. அப்போது கூட்டணி சார்பில் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி முதல்வராக இருந்தார்.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டதின் திருத்தங்கள் என்ன?: ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019-ன் பிரிவு 55ன் கீழ் திருத்தப்பட்ட விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது. பிரிவு 55 என்பது, ஆளுநரின் அதிகாரம் பற்றியது. இந்த பிரிவில்தான் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அட்வகேட் ஜெனரல், சட்ட அதிகாரிகள் (நீதிமன்ற நடவடிக்கைகளில் அட்வகேட்-ஜெனரலுக்கு உதவக்கூடியர்கள்) ஆகியோரை நியமிப்பதற்கான முன்மொழிவை, தலைமைச் செயலாளர் மூலம் சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல், வழக்கு தொடர அனுமதி வழங்குவது அல்லது மறுப்பது அல்லது மேல்முறையீடு செய்வது தொடர்பான எந்தவொரு முன்மொழிவும் சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை, தலைமைச் செயலாளர் மூலம் துணைநிலை ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

மேலும், சிறைச்சாலைகள், வழக்கு விசாரணை இயக்குநரகம் மற்றும் தடய அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களும் துணைநிலை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு புதிய விதிகள் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x