Last Updated : 13 Jul, 2024 12:22 PM

 

Published : 13 Jul 2024 12:22 PM
Last Updated : 13 Jul 2024 12:22 PM

ஐபிஎஸ் அதிகாரி கோன் பணியிடை நீக்கம் ரத்து: அந்தமான் நிக்கோபாரில் பணி அமர்வு 

டிஐஜி ஏ.கோன்

புதுடெல்லி: கோவாவில் பெண் சுற்றுலாப் பயணியிடம் தவறாக நடந்ததாக தமிழரான டிஐஜி ஏ.கோன் மீது புகார் எழுந்தது. இதனால், அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவு ரத்தாகி, அந்தமான் நிக்கோபாரில் அவர் பணி அமர்த்தப்பட்டுள்ளார்.

கடந்த 2009-ம் பேட்சி ஐபிஎஸ் அதிகாரியான சேலம் ஏற்காட்டைச் சேர்ந்த டாக்டர்.ஏ.கோன். அக்முட் (அருணாச்சலப்பிரதேசம், கோவா, மிசோராம், மற்றும் யூனியன் பிரதேசங்கள்) பிரிவில் கோவாவின் டிஐஜியாக இருந்தார். கடந்த வருடம் அவர் உடல்நலக் குறைவால் மருத்துவ விடுப்பு எடுத்திருந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று, கோவாவின் ஒரு மதுபான விடுதியில் சுற்றுலா வந்த ஒரு பெண்ணுடன் அவருக்கு தகராறு ஏற்பட்டது.

இதுதொடர்பாக கோவா சட்டப்பேரவையில் எழுந்த பிரச்சினை காரணமாக, டிஐஜியான ஏ.கோன், பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அதிகாரி கோன், கோவாவை விட்டு வெளியில் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அவரது பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு அவர், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளார். இதற்கான, மத்திய உள்துறை அமைச்சகப் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த ஆணையில் அதிகாரி மீது எந்த ஒரு ஊழல் புகார் இல்லை எனவும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய அவசியமும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருப்பதது. குடிமைப்பணி தேர்வின் வெற்றிக்கு முன் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவரான கோன், எம்பிபிஎஸ் பட்டம் பெற்றிருந்தார். இவர் டிஐஜியாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பணியில் தொடரவுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x