Published : 13 Jul 2024 06:55 AM
Last Updated : 13 Jul 2024 06:55 AM
பெங்களூரு: காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி 1 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று முன் தினம் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கர்நாடக அரசு தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி காவிரி நீரை ஜூலை 31-ம் தேதி வரை திறந்துவிட வேண்டும். பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் தினமும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தது.
இதற்கு கர்நாடக விவசாய சங்கத்தினரும், கன்னட அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழகத்துக்கு நீரை திறந்துவிடுவது குறித்து முடிவு எடுப்பதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டினார். இதில் துணை முதல்வரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், சமூக நலத்துறை அமைச்சர் ஹெச்.சி.மகாதேவப்பா, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவிரி நீரை திறந்துவிடுவது குறித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்துக்கு பிறகு சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி தமிழகத்துக்கு 1 டிஎம்சி நீரை திறந்துவிடுவதில்லை என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், நிகழாண்டில் 28 சதவீதம் குறைவாக மழை பொழிந்துள்ளது. ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட முடிவை எடுப்பதற்காக நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளேன். அதில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சி தலைவர்கள், விவசாய சங்கம், கன்னட அமைப்புகள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியை சேர்ந்த எம்பி, எம்எல்ஏ-க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...