Published : 13 Jul 2024 06:14 AM
Last Updated : 13 Jul 2024 06:14 AM

பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா மீதான புகார் விசாரணையை தொடங்கியது மத்திய அரசு

புதுடெல்லி/மும்பை: மகாராஷ்டிர மாநில பிரிவைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் புனே துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தனது தனிப்பட்ட சொகுசு காரில் சைரன் பொருத்தியது, விஐபி நம்பர் பிளேட் கோரியது, புனே கூடுதல் கலெக்டர் அஜய் மோர் இல்லாத நேரத்தில் அவரது அலுவலகத்தை பயன்படுத்தியது உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுகள் பூஜா கேத்கர் மீது சுமத்தப்பட்டது.

இதுகுறித்து புனே ஆட்சியர் அளித்த புகாரைத் தொடர்ந்து மாநில அரசின் தலைமை செயலாளரின் உத்தரவின் பேரில் பூஜா கேத்கர் வாஷிமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனிடையே யுபிஎஸ்சி தேர்வில் சில சலுகைகளைப் மோசடியாக பெற்றதாகவும் பூஜா மீது புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, அவரது ஓபிசி அந்தஸ்து குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், பூஜாவின் தாயார் கையில் துப்பாக்கியுடன் சிலரை மிரட்டுவது போன்ற பழைய வீடியோ ஒன்றும் வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதையடுத்து, பூஜாவுக்கு எதிராக பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் கூடுதல் செயலர் மனோஜ் திவேதி விசாரணையை துவக்கி உள்ளார். 2 வாரங்களில் விசாரணை முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பூஜா பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x