Published : 12 Jul 2024 05:02 PM
Last Updated : 12 Jul 2024 05:02 PM

எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட ஜூன் 25 இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ ஆக அனுசரிப்பு: மத்திய அரசு

புதுடெல்லி: நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் தேதி, இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ ஆக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஜூன் 25, 1975 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சர்வாதிகார மனநிலையின் மோசமான வெளிப்பாடாக, நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். இதன்மூலம், அவர் நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார். எந்தத் தவறும் செய்யாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறை கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டனர். ஊடகங்களின் குரல் அடக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ஆம் தேதியை அரசியலமைப்பு படுகொலை தினம் ('சம்விதான் ஹத்யா திவாஸ்') ஆகக் கடைப்பிடிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளை சகித்த அனைவரின் மகத்தான பங்களிப்பையும் நினைவுகூரும். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு எடுத்துள்ள இந்த முடிவு, அடக்குமுறை அரசாங்கத்தின் கைகளில் விவரிக்க முடியாத துன்புறுத்தலை எதிர்கொண்ட போதிலும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடிய லட்சக்கணக்கான மக்களின் ஆன்மாவுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அரசியலமைப்பு படுகொலை தினம் அனுசரிக்கப்படுவது, ஒவ்வொரு இந்தியரிடமும் தனிமனித சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும் உதவும். இதனால் காங்கிரஸ் போன்ற சர்வாதிகார சக்திகள், அந்த கொடூரங்களை மீண்டும் செய்வதைத் தடுக்கும்" என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x