Published : 12 Jul 2024 06:45 AM
Last Updated : 12 Jul 2024 06:45 AM

பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க அசாம் அரசு ஊழியர்களுக்கு 2 நாள் விடுப்பு

குவாஹாட்டி: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது அலுவலக எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தங்கள் பெற்றோர் மற்றும் தனது வாழ்க்கைத் துணைவரின் பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க ஏதுவாக, மாநில அரசு ஊழியர்களுக்கு 2 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும். அதேநேரம், இந்த விடுப்பை வயதான பெற்றோருடன் நேரத்தை செலவழிக்கவும், அவர்களை கவனித்துக் கொள்ளவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக தனிப்பட்ட கொண்டாட்டத்துக்காக பயன்படுத்தக் கூடாது. வரும் நவம்பர் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சிறப்பு விடுப்பு வழங்கப்படும். இதற்கு நடுவே, 7-ம் தேதி சத் பூஜை, 9-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாக உள்ளன. எனவே, அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக 5 நாட்கள் பெற்றோருடன் செலவிட வேண்டும்.

அத்தியாவசிய சேவை துறைகளைச் சேர்ந்தவர்கள் சுழற்சி முறையில் வேறு நாட்களில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். பெற்றோர் இல்லாதவர்கள் இந்த விடுமுறையை அனுபவிக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x