Published : 10 Jul 2024 08:30 AM
Last Updated : 10 Jul 2024 08:30 AM

7 மாநிலங்களில் 13 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

புகைப்படம்: குமார் எஸ்எஸ்

புதுடெல்லி: பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மாலை 6 மணிக்கு முடிவடைய உள்ள நிலையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது

மேற்கு வங்க மாநிலத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்ஷின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகளிலும், இமாச்சலப் பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய 3 தொகுதிகளிலும், உத்தரகாண்டில் பத்ரிநாத் மற்றும் மங்களூர் என இரு தொகுதிகளிலும், பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு தொகுதியிலும், பிஹாரில் ரூபாலி தொகுதியிலும், தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியிலும், மத்திய பிரதேசத்தில் அமர்வாரா தொகுதியிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

வேட்பாளர் மரணம் அல்லது பதவியை ராஜினாமா செய்தது போன்ற காரணங்களால் ஏற்பட்ட காலியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெறுகிற நான்கு தொகுதிகளில் 3 தொகுதிகளை கடந்த 2021 தேர்தலில் பாஜக கைப்பற்றியிருந்தது. இதனால் இங்கு திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக இடையேயான மோதலாக இடைத்தேர்தல் களம் உள்ளது.

பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பான்மையான கங்கோடா சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களை இவ்விரு கட்சிகளும் நிறுத்தியுள்ளன.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மங்களூரில், காங்கிரஸ் கட்சி காசி நிஜாமுதீனை நிறுத்தியுள்ளது, அவர் மூன்று முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். உத்தராகண்ட் உருவாக்கப்பட்டதில் இருந்து மங்களூர் தொகுதியில் பாஜக இதுவரை வெற்றி பெற்றதில்லை. அக்கட்சி கர்தார் சிங் பதானாவை களமிறக்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி தனது வேட்பாளராக மொஹிந்தர் பகத்தை அறிவித்துள்ளது. காங்கிரஸ் அந்தத் தொகுதியில் தங்கள் கட்சியின் வேட்பாளராக சுரிந்தர் கவுரை அறிவித்துள்ளது.

ஆம் ஆத்மி எம்எல்ஏ ஷீத்தல் அங்கூரல் ராஜினாமா செய்ததை அடுத்து ஜலந்தர் மேற்கு சட்டமன்றத் தொகுதி காலியானது. அங்கூரல் மார்ச் 28 அன்று ராஜினாமா செய்தார். பின்னர் பாஜகவில் இணைந்து தற்போது அதே தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் அங்கூரல்.

தமிழகத்தின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக எம்எல்ஏ புகழேந்தி மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தற்போது திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைவேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

பெரும்பாலும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கும் இடையேயான போட்டியாக இந்த இடைத்தேர்தல்கள் உருவாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x