Last Updated : 06 Jul, 2024 06:03 AM

 

Published : 06 Jul 2024 06:03 AM
Last Updated : 06 Jul 2024 06:03 AM

ஹாத்ரஸ் சம்பவத்திற்கு நிர்வாக அலட்சியமே காரணம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

உ.பி.யின் அலிகர் மாவட்டம், பில்கானா கிராமத்தில், ஹாத்ரஸ் நெரிசலில் இறந்த பெண் ஒருவரின் குடும்பத்தினரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். படம்: பிடிஐ

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை போலே பாபா என்பவர் நடத்திய ஆன்மிகக் கூட்டத்தில் நெரிசல்ஏற்பட்டதில் 121 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க அலிகரின் பில்கானா கிராமத்திற்கு காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று காலை 7.30 மணிக்கு வந்தார். நெரிசலில் சிக்கி உயிரிழந்த மஞ்சு தேவி என்பவரின் குடும்பத்தினரை ராகுல் சந்தித்தார். மஞ்சு தேவியுடன் சிறுவயது மகனும் உயிரிழந்தார்.

அதே கிராமத்தில் உயிரிழந்த சாந்தி தேவி, பிரேமாவதி தேவிகுடும்பத்தினரையும் ராகுல் சந்தித்தார். அவர்களது வீடுகளிலும் சிறிது நேரம் அமர்ந்து அனைவருக்கும் ஆறுதல் கூறினார்.

அப்போது அங்கு வந்த கிராமமக்கள், போலே பாபா பற்றி ராகுலிடம் பல்வேறு புகார்களை கூறினர். இந்த வகையில் சுமார்25 நிமிடங்கள் இருந்த ராகுல்,இப்பிரச்சினையை நாடாளுமன்றத்திலும் எழுப்புவதாக கூறினார்.

இதையடுத்து ராகுல் அருகில் உள்ள ஹாத்ரஸுக்கு சென்றார். அங்கு உயிரிழந்த ஆஷா தேவி, முன்னி தேவி, ஓம்வதி ஆகியோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். டெல்லி திரும்பும் முன் செய்தியாளர்களிடம் ராகுல்கூறுகையில், ‘‘இந்த சம்பவத்தில்மிக அதிகமானோர் உயிரிழந்ததுடன், அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. இதற்கு அரசு நிர்வாகத்தினர் மீதான குறைபாடுகளும் செய்ததவறுகளுமே காரணம். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்ச உதவித்தொகை வழங் கப்பட வேண்டும்’’ என்றார்.

தலைமறைவான முக்கியக் குற்றவாளி தேவ் பிரகாஷ் மதுக்கர், உ.பி. மாநில ஹாத்ரஸ் மாவட்ட கிராமப் பஞ்சாயத்தின் அரசு அலுவலர் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை பணியிலிருந்து நீக்கி உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் நேற்றுபாபாவின் மெயின்புரி ஆசிரமத்திற்கு வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘முக்கிய குற்றவாளியான தேவ்பிரகாஷ் மதுக்கர் விரைவில் போலீஸில் சரண் அடைவார். அவர் ஒரு கிரிமினல் அல்ல. அவர் இதய நோய் சிகிச்சையில் உள்ளார். மதுக்கரின் குடும்ப உறுப்பினரும் நெரிசலில் சிக்கி இறந்துள்ளார். போலே பாபாவுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரது சிறுநீரகம் பழுதடைந்துள்ளது. அவர் ஏதாவது ஒரு ஆசிரமத்தில்தான் இருப்பார் என கருதுகிறேன்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x