Published : 04 Jul 2024 03:15 PM
Last Updated : 04 Jul 2024 03:15 PM

மேட்டுப்பாளையம் - கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் எல் முருகன் கோரிக்கை

புதுடெல்லி: மேட்டுப்பாளையம் - கோவை ரயில் நிலையம் வரை இரட்டை இருப்புப் பாதை அமைக்க ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை ரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையை வலியுறுத்தும் மனு ஒன்றை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல் முருகன், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வழங்கியுள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் எல் முருகன் வெளியிட்டுள்ள பதிவில், “கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் கோவை ரயில்நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைத்திட வேண்டும் என மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும், நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அதற்கான மனுவை, இன்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து வழங்கினேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x