Published : 04 Jul 2024 01:30 PM
Last Updated : 04 Jul 2024 01:30 PM

விண்வெளிக்கு செல்வதற்கு முன் பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்

ஜெயராம் ரமேஷ் | கோப்புப் படம்

புதுடெல்லி: விண்வெளிக்குச் செல்வதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் வரும் 2025ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவராக இருக்க வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அவர், “பிரதமர் மோடிக்கு பல முக்கிய பொறுப்புகள் இருக்கின்றன. இருந்தாலும், ககன்யான் விண்வெளித் திட்டத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான விண்வெளி வீரர் பயிற்சித் திட்டத்தில் அவர் இணைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாட்டின் தலைவரை நம்பிக்கையுடன் விண்வெளிக்கு அனுப்பும் திறன் என்பது, நாம் அனைவரும் மிகவும் பெருமைப்படக்கூடிய ஒன்று” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரோ மூன்று விண்வெளி வீரர்களை 400 கிமீ சுற்றுவட்டப் பாதைக்கு 3 நாள் பயணமாக அனுப்பி அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பிக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் ₹9 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிப் பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விமானிகளின் பெயர்களை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரியில் வெளியிட்டார். குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், விண்வெளிப் பயணத்தில் பிரதமர் மோடியும் இணையக்கூடும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழலில், இது குறித்த செய்தியை டேக் செய்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “பிரதமர் மோடி, விண்வெளிக்குச் செல்வதற்கு முன், மணிப்பூருக்குச் செல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே பல மாதங்களாக நீடித்து வரும் மோதல் போக்கு காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி இதுவரை அங்கு செல்லாததை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x