Published : 03 Jul 2024 09:31 AM
Last Updated : 03 Jul 2024 09:31 AM

உ.பி. கூட்ட நெரிசல் நிகழ்விடத்தில் காவல் உயர் அதிகாரிகள் ஆய்வு; ஆசிரமத்திலும் சோதனை

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மத வழிபாட்டு கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 90 பெண்கள் உட்பட 130க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். குழந்தைகள், முதியவர்கள் உட்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்த நிலையில் நிகழ்விடத்தில் இன்று (புதன்கிழமை) காலை மாநில காவல் உயர் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், போலே பாபா ஆசிரமத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். போலே பாபா இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாத சூழலில் போலீஸார் ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டனர். இதனை ஒட்டி போலே பாபா ஆசிரமத்தின் முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர்.

ஹாத்ரஸ் நிகழ்விடத்தில் தடயவியல் நிபுணர் குழு, மோப்ப நாய்கள், உத்தர பிரதேச ஆயுதப்படை காவல் பிரிவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.

வழக்குப் பதிவு: ஹாத்ரஸ் ஆன்மிக கூடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முதல் தகவல் அறிக்கையின்படி 80 ஆயிரம் பேர் கூடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். கட்டுக்கடங்காத கூட்டம் ஒரே நேரத்தில் நிகழ்விடத்தில் இருந்து வெளியேறியதால் விபத்து நடந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 105, 110, 126 (2), 223 மற்றும் 238ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால் முதல் தகவல் அறிக்கையில் போலே பாபாவின் பெயர் இடம்பெறவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என ஐந்து பேரின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரதமர் நிவாரணம் அறிவிப்பு: முன்னதாக நேற்று விபத்தில் உயிரிழந்தோருக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x