Published : 03 Jul 2024 06:19 AM
Last Updated : 03 Jul 2024 06:19 AM

ராகுல் போல நடந்து கொள்ள வேண்டாம்: என்டிஏ எம்.பி.க்களுக்கு பிரதமர் அறிவுரை

புதுடெல்லி: மக்களவையில் ராகுல் காந்தியைப் போல நடந்துகொள்ள வேண்டாம் என தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சிவபெருமான் படத்தைக் காட்டி பேசும்போது, “இந்துக்கள் வன்முறை, வெறுப்பை பரப்புவது இல்லை. ஆனால், தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜகவினர் வன்முறை, வெறுப்பை மட்டுமே பரப்புகின்றனர்” என்றார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், தேசிய ஜனநாய கக் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று காலையில் நடைபெற்றது. 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக என்டிஏ எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பேசினார். அப்போது மக்களவையில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து அவர் ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடிக்கு என்டிஏ எம்.பி.க்கள் பிரம்மாண்ட மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததுடன் அவருக்கு ஆதரவாக இருப்போம் என உறுதி அளித்தனர். இக்கூட்டத்தில் பேசிய மோடி,அனைவரும் நாட்டுக்கு சேவைசெய்வதற்காகவே நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளோம் என்றும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை வழங்கினார். தேசியமுக்கியத்துவம் வாய்ந்த மற்றும்தங்கள் தொகுதி தொடர்பான பிரச்சினைகளை எழுப்ப வேண்டும் என்று எங்களை கேட்டுக் கொண்டார். குறிப்பாக நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சட்டதிட்டங்கள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றி முன்மாதிரியான உறுப்பினராக இருக்க வேண்டும் என்றுவலியுறுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலானது நாட்டு நலன் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அவையில் திங்கள்கிழமை பேசும்போது, தனது முதுகை மக்களவைத் தலைவர் பக்கம் திருப்பிக் கொண்டார். மேலும் அவை விதிகளை மீறிபேசியதுடன் மக்களவைத் தலைவரை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்டார். இது நம் அனைவருக்கும் பாடம். ராகுலைப் போல அவையில் நடந்துகொள்ளக் கூடாது என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x