Published : 02 Jul 2024 05:30 AM
Last Updated : 02 Jul 2024 05:30 AM

உலகின் மிக சக்திவாய்ந்த வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை

இந்திய கடற்படை நடத்திய சோதனையில் வெடித்துச் சிதறிய டிஎன்டி வெடிகுண்டு (இடது), செபெக்ஸ் 2 வெடிகுண்டு (வலது).

புதுடெல்லி: உலகின் மிக சக்திவாய்ந்த புதியவெடிகுண்டை இந்தியா தயாரித்திருக்கிறது. இது டிஎன்டி வெடிகுண்டை விட 2.01 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போது நாசகார வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது உலக நாடுகளின் ராணுவங்களில் டிஎன்டி, ஆர்டிஎக்ஸ், டைனமைட் உள்ளிட்ட வகைகளை சேர்ந்த வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த சூழலில் மகாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த ‘எகானமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட்' பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து செபெக்ஸ் 2 என்ற புதிய வெடிகுண்டை தயாரித்து உள்ளது. இதுஉலகின் மிக சக்திவாய்ந்த வெடிகுண்டுகளில் ஒன்றாகும். டிஎன்டி வெடிகுண்டைவிட 2.01 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இந்த வகை வெடிகுண்டுகளை பிரம்மோஸ் ஏவுகணை உட்பட இந்தியாவின் அனைத்து வகை ஏவுகணைகளிலும் பயன்படுத்த முடியும். பீரங்கி, போர் விமானம், போர்க்கப்பல், நீர்மூழ்கியில் இருந்தும் தாக்குதல் நடத்த முடியும். புதிய வகை வெடிகுண்டு குறித்து இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

அணு குண்டுகள் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.எனவே அவை போரில் பயன்படுத்தப்படுவது இல்லை. இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளில் ஹெமெக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்படுகிறது. இது டிஎன்டிவெடிகுண்டைவிட 1.5 மடங்கு சக்திவாய்ந்தது ஆகும். இந்தியாவின்பினாகா ஏவுகணைகளில் டென்டெக்ஸ், டார்பெக்ஸ் வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை டிஎன்டி வெடிகுண்டைவிட 1.3 மடங்கு சக்திவாய்ந்தது ஆகும்.

தற்போது சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நாக்பூரை சேர்ந்த தனியார் நிறுவனமான 'எகானமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட்', செபெக்ஸ் 2 என்ற புதிய வகை வெடிகுண்டை தயாரித்து உள்ளது. இது டிஎன்டி வெடிகுண்டைவிட 2.01 மடங்கு சக்தி வாய்ந்தது ஆகும். இந்த புதிய வெடிகுண்டை இந்திய கடற்படை அண்மையில் வெற்றிகரமாக சோதனை செய்தது.

டிஎன்டி வெடிகுண்டைவிட செபெக்ஸ் 2 வெடிகுண்டில் 20 %அளவுக்கு அதிக வெப்பம் வெளியாகிறது. குண்டு வெடித்து சிதறும்போது ஏற்படும் விட்டம் 35 மடங்கு அதிகமாக இருக்கிறது. டிஎன்டி வெடிகுண்டைவிட செபெக்ஸ் 2-வின் பாதிப்பு 28% அதிகமாக உள்ளது. நாக்பூர் ஆலையில் செபெக்ஸ் வெடிகுண்டுகள் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு இந்தியாவின் முப்படைகளுக்கும் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் இந்திய முப்படைகளின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும்

செபெக்ஸ் 2 வெடிகுண்டு தயாரிப்பு மூலம் இந்தியா புதிய சாதனையை படைத்து உள்ளது. இந்த வெடிகுண்டுகளை வாங்க இப்போதே பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. எதிர்காலத்தில் இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இவ்வாறு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x