Published : 01 Jul 2024 06:19 AM
Last Updated : 01 Jul 2024 06:19 AM

டெல்லியில் தேர்தல் தோல்விக்கு ஆம் ஆத்மி மதுபான ஊழலே காரணம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

அர்விந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் மதுபான ஊழலால்தான் மக்களவைத் தேர்தலின் போது டெல்லியில் எங்கள் கட்சி தோல்வி அடைந்தது என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் தத் நேற்று கூறியதாவது: டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக நாங்கள் புகார் செய்தபோது, இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 18 மாதங்கள் வரை அமலாக்கத் துறையும் சிபிஐ அமைப்பும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், மக்களவைத் தேர்தலுக்கு ஒரு மாதம் இருந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை கைது செய்தனர்.

மதுபான ஊழல் விவகாரத்தால்தான், மக்களவைத் தேர்தலின் போது டெல்லியில் எங்களுக்கு தோல்வி ஏற்பட்டது. டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டு சேராமல் போட்டியிட்டிருந்தால் எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கும்.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஊழல் புகாரில் சிக்கி சிறையில் உள்ளனர். இதனால்தான் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் தோல்வி ஏற்பட்டது.

பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டியது ஒரு அமைச்சரின் கடமை. ஆனால், டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சர் ஆதிஷி தர்ணாவில் ஈடுபட்டு நாடகம் நடத்துகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டெல்லியில் 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 3, ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில் 7 தொகுதியிலும் பாஜக வெற்றி பெற்றது.

இதுகுறித்து ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் நேற்றுகூறும்போது, “அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சிகளுக்குள் பிளவுஏற்படுவது நல்லதல்ல. அதேநேரம் பல்வேறு மாநிலங்களின் உள்ளூர் தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க உரிமை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x