Published : 29 Jun 2024 09:27 AM
Last Updated : 29 Jun 2024 09:27 AM

டெல்லியில் கட்டுமானப் பணியிடத்தில் விபத்து: சிக்கிய தொழிலாளிகளில் ஒருவர் சடலமாக மீட்பு

புதுடெல்லி: டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் கட்டுமானப் பணியிடத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்ட நிலையில், சிக்கிய தொழிலாளர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நிகழ்விடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர், காவல் அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய தொழிலாளிகளில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இருவர் இன்னும் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர் சந்தோஷ் குமார் யாதவ் (19) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காலை 6.10 மணியளவில் சந்தோஷ் குமார் யாதவ் மீட்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். எஞ்சிய இருவரை மீட்கும் பணி நடந்து வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்தகனமழை காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தின் முதலாவது டெர்மினலின் மேற்கூரை நேற்று அதிகாலை 5.30 அளவில் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினரும், போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அங்கிருந்த கார்கள் நசுங்கிசேதமாயின. இதில் காருக்குள்சிக்கியிருந்தவர்களை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.

மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி விமானநிலைய டெர்மினல் ஒன்றில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை டெல்லியில்228 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 1936-ம் ஆண்டுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் இந்தளவுக்கு மழை பெய்துள்ளது.88 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த மழை சாதனை அளவாகப் பார்க்கப்படுகிறது.

1936-ம் ஆண்டு் ஜூன் மாதத்தில் 235.5 மில்லிமீட்டர் மழை பெய்ததேஇதுவரை அதிகபட்ச மழை அளவாகஉள்ளது. மழை காரணமாக டெல்லி-என்சிஆர் (டெல்லி-தேசிய தலைநகர மண்டலப் பகுதிகள்) பகுதிகளில் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். நகரின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x