Published : 29 Jun 2024 04:35 AM
Last Updated : 29 Jun 2024 04:35 AM

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்: பிரதமர் மோடி ஜூலை 2-ம் தேதி பதில்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். நாடாளுமன்ற வழக்கப்படி, குடியரசுத் தலைவர் உரைக்குநன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தனித்தனியாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும்.

இதன்படி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவையில் பிரதமர் மோடி ஜூலை 2-ம் தேதி பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை பாஜக எம்.பி சுதன்ஸு திரிவேதி நேற்று தாக்கல் செய்தார். இதற்கு பிரதமர் மோடி ஜூலை 3-ம் தேதி பதில் அளிக்கிறார்.

இரு அவைகளிலும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதும் விவாதம் தொடரும். தற்போது மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. விவாதத்தில் நீட் மற்றும் யுஜிசி வினாத் தாள் கசிவு போன்ற விவகாரங்கள் எழுப்பப்பட்டு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உட்பட பல அமைச்சர்கள் இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்கலாம் எனத் தெரிகிறது. ஜூலை 3-ம் தேதியுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x