Published : 28 Jun 2024 07:32 PM
Last Updated : 28 Jun 2024 07:32 PM

சர்வதேச மதச் சுதந்திரம் 2023: அமெரிக்க அரசின் அறிக்கையை நிராகரித்த இந்தியா!

ரந்திர் ஜெய்ஸ்வால் | கோப்புப் படம்

புதுடெல்லி: சர்வதேச மதச் சுதந்திரம் குறித்த அமெரிக்க அரசின் அறிக்கை ஒரு சார்பானது என்பதால், இந்தியா அதனை நிராகரித்துள்ளது என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சர்வதேச மதச் சுதந்திரம் 2023 பற்றிய அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கை ஒரு சார்பானது என்பதால், அதனை இந்தியா நிராகரித்துள்ளது. இந்தியாவின் சமூக அமைப்பைப் பற்றிய புரிதல் இல்லாமல், வாக்கு வங்கி அடிப்படையிலான கருத்துகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட கண்ணோட்டம் கொண்டதாக அந்த அறிக்கை உள்ளது.

குற்றச்சாட்டுகள், தவறான விளக்கங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மைகளின் பயன்பாடு, ஒரு சார்பான ஆதாரங்களை நம்புதல் மற்றும் சிக்கல்களின் ஒருதலைப்பட்சமான முன்கணிப்பு ஆகியவற்றின் கலவையாக இந்த அறிக்கை உள்ளது. இந்தியாவின் அரசியலமைப்பு விதிகள் குறித்தும், முறையாக இயற்றப்பட்ட இந்திய சட்டங்கள் குறித்தும் இந்த அறிக்கையின் சித்தரிப்பு விரிகிறது. முன்கூட்டியே முடிவு செய்துவிட்ட ஒரு புனைவை, முன்னெடுப்பதற்கு ஏற்ப சம்பவங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளின் செல்லுபடியாகும் தன்மையையும், அவற்றை இயற்றுவதற்கு சட்டமன்றங்களுக்கு உள்ள உரிமையையும் இந்த அறிக்கை கேள்விக்குள்ளாக்குகிறது. இந்திய நீதிமன்றங்கள் வழங்கிய சில தீர்ப்புகளின் நேர்மையை இந்த அறிக்கை சந்தேகிக்கிறது. நிதி முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கோடு இயற்றப்பட்டுள்ள கண்காணிப்பு விதிமுறைகளையும் இந்த அறிக்கை எதிர்க்கிறது.

இந்தியாவில் இருப்பதைவிட, அமெரிக்காவில் கடுமையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் உள்ளன. மனித உரிமைகள் மற்றும் பன்முகத்தன்மைக்கான மரியாதை ஆகியவை, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே விவாதப் பொருளாக இருந்து வருகின்றன.

2023-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த வெறுப்பு சார்ந்த குற்றங்கள், அங்குள்ள இந்திய குடிமக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான இனவெறி தாக்குதல்கள், வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துதல் மற்றும் குறிவைத்தல், சட்ட அமலாக்க அதிகாரிகளால் தவறாக நடத்தப்படுதல் உள்ளிட்ட பல வழக்குகளை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. இது போன்ற நடவடிக்கைகள், ஒரு நாடு மற்றொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கான உரிமமாக மாறிவிடக்கூடாது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x