Published : 28 Jun 2024 01:51 PM
Last Updated : 28 Jun 2024 01:51 PM

ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்

ஹேமந்த் சோரன் | கோப்புப்படம்

ராஞ்சி: நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 31-ம் தேதி முதல்வர் பொறுப்பை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்த பிறகு அவரை இந்த வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்தது. அவர் நீதிமன்ற காவலில் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பானு பிரதாப் பிரசாத், முகமது சதாம் உசேன் மற்றும் அப்சர் அலி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கைதுக்கு முன்னதாக ராஞ்சியில் உள்ள இல்லத்தில் ஹேமந்த் சோரனை பல மணி நேரம் விசாரித்தது அமலாக்கத் துறை. ராஞ்சியின் பார்கெய்ன் பகுதியில் ரூ.266 கோடி மதிப்பிலான 8.86 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக சோரன் மீது குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த 21-ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக ராஞ்சியின் கான்கே சாலையில் கமலேஷ் சிங் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், ரூ.1 கோடி ரொக்கம் மற்றும் 100 துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனை அவரது வழக்கறிஞர் அருணாப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு ஜாமின் கோரி கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு ரத்து செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x