Published : 28 Jun 2024 05:13 AM
Last Updated : 28 Jun 2024 05:13 AM

நாடு முழுவதும் மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும்: நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை , குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா , பிரதமர் மோடி ஆகியோர் நேற்று அழைத்து வந்தனர். படம்: பிடிஐ

புதுடெல்லி: நாடு முழுவதும் ‘பிஎம் ஆவாஸ் யோஜனா’ திட்டத்தில் மேலும் 3 கோடிவீடுகள் கட்டித் தரப்படும் என்று குடியரசுத் தலைவர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18-வது மக்களவையின் முதல் கூட்டம் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றுவதற்காக, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குதிரைப் படை அணிவகுப்புடன் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், மக்களவை தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி ஆகியோர் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவர் பேசியதாவது: மக்களவை தேர்தலை வெற்றிகரமாக நடத்திய தேர்தல் ஆணையத்தை பாராட்டுகிறேன். வலுவான அரசு, தெளிவான முடிவு எடுக்கும் திறன், நல்லாட்சி, ஸ்திரத்தன்மை, நேர்மை, கடின உழைப்பு, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு புதிய அரசை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இது கடந்த 10 ஆண்டுகால ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த 10 ஆண்டுகளில் 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. விரைவில் 3-வது இடத்தை எட்டும்.

மிக நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியது. ‘பிஎம் ஆவாஸ் யோஜனா’ திட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி பெண்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. புதிதாக 3 கோடி வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட் டுள்ளது.

சுயஉதவி குழுக்களை சேர்ந்த 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்றும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

அகமதாபாத் - மும்பை புல்லட் ரயில் திட்டம் தீவிரமடைந்துள்ளது. நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு பகுதிகளிலும் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. நீர்வழி திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.

ரேஷன் கடைகள் மூலம் 80 கோடி பேருக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 55 கோடி பேர் மருத்துவ காப்பீடு வசதி பெற்றுள்ளனர். 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் 7 ஐஐடி, 16 ஐஐஐடி, 7 ஐஐஎம், 15 எய்ம்ஸ், 315 மருத்துவ கல்லூரிகள், 390 பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரலில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.2 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது.

ரூ.21,000 கோடி ஆயுத ஏற்றுமதி: கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் பாதுகாப்பு தளவாடம், ஆயுத ஏற்றுமதி 18 மடங்கு அதிகரித்துள்ளது. சுமார் ரூ.21,000 கோடிக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. உத்தர பிரதேசம், தமிழகத்தில் பாதுகாப்பு தளவாட வழித்தடங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

தண்டனையை மையமாக கொண்ட ஆங்கிலேயர் ஆட்சிக் கால சட்டங்களுக்கு மாற்றாக, நீதியை முன்னிறுத்தும் வகையில் புதிய குற்றச் சட்டம் வரும் ஜூலை முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் நீதித் துறை செயல்பாடுகள் விரைவுபடுத்தப்படும்.

அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையின ருக்கு குடியுரிமை வழங்கும் சிஏஏ சட்டம் வெற்றிகரமாக அமல்படுத் தப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த 1975 ஜூன் 25-ம் தேதி அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனம், அரசமைப்பு சாசனத்தின் மீதான நேரடி தாக்குதல் ஆகும். அது ஒரு கறுப்பு அத்தியாயம்.

அரசமைப்பு சாசனத்துக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக் கிறது. இதை கருத்தில் கொண்டே ஆண்டுதோறும் நவம்பர் 26-ம் தேதி அரசமைப்பு சாசன தினமாக கொண்டாடப்படுகிறது.

வரும் 2047-ம் ஆண்டுக்குள்வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்கு எம்.பி.க்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x