Published : 26 Jun 2024 04:57 PM
Last Updated : 26 Jun 2024 04:57 PM

அவசரநிலைக்கு எதிரான சபாநாயகரின் உரை மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி

புதுடெல்லி: அவசரநிலைக்கு எதிராக மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா பேசியது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சபாநாயகர், அவசரநிலையை வன்மையாகக் கண்டித்ததற்கும், அந்தக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களை எடுத்துரைத்ததற்கும், ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்த விதத்தை குறிப்பிட்டதற்கும் நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த நாட்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தும் வகையில் மவுன அஞ்சலி செலுத்தியது ஓர் அற்புதமான செயல்.

அவசரநிலை 50 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. இன்றைய இளைஞர்கள் அதைப் பற்றி தெரிந்துகொள்வது முக்கியம். ஏனென்றால், அரசியலமைப்பு காலாவதியாகி, பொதுக் கருத்துகள் நசுக்கப்பட்டால், நிறுவனங்கள் அழிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு பொருத்தமான உதாரணம். எமர்ஜென்சியின் போது நடந்த சம்பவங்கள் சர்வாதிகாரம் எப்படி இருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.

அவசரநிலை காலத்தின் கருப்பு தினங்கள் என்ற பெயரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், "ஜூன் 25, 1975 இந்திய ஜனநாயக வரலாற்றில் ஓர் இருண்ட அத்தியாயமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நாளில், எமர்ஜென்சியை அறிவித்ததன் மூலம் ஜனநாயகத்தை பணயக் கைதியாக வைத்திருந்த குற்றத்தை காங்கிரஸ் அரசு செய்தது. ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை ஆட்சியில் வைத்திருக்க, காங்கிரஸ் பல முறை அரசியலமைப்பின் உணர்வை மீறியுள்ளது.

அரசியல் சாசனத்தைக் காப்போம் என்று காங்கிரஸ் கட்சி தற்போது வேண்டுகோள் விடுக்கும்போது, ​​சோசலிஸ்டுகள் அதன் பின்னால் நின்றுகொண்டு பதாகைகளை ஏந்துகிறார்கள். சோசலிச மரபின் கொடியை ஏந்தியவர்களான ஜெயப்பிரகாஷ் நாராயண், ராஜ்நாராயண், ஜார்ஜ் பெர்னாண்டஸ், சௌத்ரி சரண் சிங், முலாயம் சிங் போன்றவர்கள் காங்கிரசால் சிறையில் அடைக்கப்பட்டதை அவர்கள் மறந்து விட்டார்கள்.

28 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த காங்கிரஸ், தனது சக்தியைக் காப்பாற்றிக் கொள்ள, அரசியல் சட்டத்தின் கண்ணியத்தை மீறி, எமர்ஜென்சியை விதித்தது வேடிக்கையானது. ஜூன் 25, 1975 நள்ளிரவுக்குப் பிறகு, நாடு முழுவதும் சிறைச்சாலையாக மாறியது.

ஜனநாயகம் இல்லாத ஒரு கட்சியால் எப்படி நாட்டுக்கு ஜனநாயகத்தை வழங்க முடியும்? காங்கிரஸின் கட்டமைப்பே வாரிசு அரசியல் எனும் அடித்தளத்தில் உள்ளது. அரசியல் சாசனத்தைக் காப்போம் என்று தற்போது பேசும் ராகுல் காந்தியின் பாட்டிதான் அவசரநிலையை அறிவித்தார். ஜனநாயக அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்ட உள் கட்டமைப்பும், பணி நடை முறையும் கொண்ட அரசியல் கட்சியால் மட்டுமே நாட்டில் வலுவான ஜனநாயகத்தை வழிநடத்த முடியும். இந்த தரநிலைகளை 100 சதவீதம் பூர்த்தி செய்துள்ள கட்சி பாஜக" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x