Published : 26 Jun 2024 03:29 PM
Last Updated : 26 Jun 2024 03:29 PM

‘1975 அவசரநிலை’க்கு எதிராக தீர்மானம்: சபாநாயகர் ஓம் பிர்லா நடவடிக்கையால் மக்களவையில் அமளி!

புதுடெல்லி: இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட அவசநிலை பிரகடனத்தைக் கண்டித்து மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லா தீர்மானம் ஒன்றை வாசித்தார். அவரது நடவடிக்கைக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.

மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று (ஜூன் 26) நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து, 18வது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா பொறுப்பேற்றார். பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் அவரை அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்து தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்ற ஓம் பிர்லா, சிறிது நேரத்திலேயே 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரநிலை பிரகடனத்துக்கு எதிராக தீர்மானம் ஒன்றை வாசித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

அவர்களின் எதிர்ப்பை மீறி சபாநாயகர் ஓம் பிர்லா தனது தீர்மானத்தை வாசித்தார். அப்போது அவர், “1975ல் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட முடிவை இந்த அவை கடுமையாகக் கண்டிக்கிறது. எமர்ஜென்சியை எதிர்த்து போராடி, இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றிய அனைவரின் உறுதியையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

ஜூன் 25, 1975 இந்திய வரலாற்றில் எப்போதும் ஒரு கருப்பு அத்தியாயமாக அறியப்படும். இந்த நாளில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை விதித்து, பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்தினார்.

இந்தியாவில் ஜனநாயக விழுமியங்களும் விவாதங்களும் எப்போதும் ஆதரிக்கப்படுகின்றன. ஜனநாயக விழுமியங்கள் எப்போதும் பாதுகாக்கப்படுகின்றன. அவை எப்போதும் ஊக்குவிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட இந்தியாவில் சர்வாதிகாரத்தை திணித்தார் இந்திரா காந்தி. அதன் காரணமாக, இந்தியாவின் ஜனநாயக விழுமியங்கள் நசுக்கப்பட்டன; கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒட்டுமொத்த தேசமும் அப்போது சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போதைய சர்வாதிகார அரசாங்கம் ஊடகங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது. நீதித்துறையின் தன்னாட்சி மீதும் கட்டுப்பாடு இருந்தது” என்று தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, அவை உறுப்பினர்களை சிறிது நேரம் மவுனமாக இருக்குமாறு வலியுறுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா, பின் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, பாஜக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே அவசரநிலை பிரகடனத்துக்கு எதிராக பதாகைகளை அசைத்தும், முழக்கங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x