Last Updated : 26 Jun, 2024 04:47 AM

2  

Published : 26 Jun 2024 04:47 AM
Last Updated : 26 Jun 2024 04:47 AM

சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சு: பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் உதயநிதிக்கு ஜாமீன்

பெங்களூரு: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கடந்த 2023 செப்டம்பரில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், “டெங்கு, மலேரியா, கரோனாபோல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக பல்வேறு மாநிலங்களிலும் வழக்கு தொடரப்பட்டது.

பெங்களூருவில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் 42-வது கூடுதல் அமர்வு சிறப்பு நீதிமன்றத்தில் பஜ்ரங் தள நிர்வாகி பரமேஷா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘‘2 முறை சம்மன் அனுப்பியும் உதயநிதி ஆஜராகவில்லை ஜூன் 25-ல் கட்டாயம் ஆஜராக வேண்டும்’’ என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி நேற்று காலை 11 மணிக்கு ஆஜரானார்.

அவருக்கு ஜாமீன் கோரி, நீதிபதி சிவகுமாரிடம் வழக்கறிஞர்கள் வில்சன், பாலாஜி சிங் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ரூ.1 லட்சம் பிணையுடன் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அடுத்த விசாரணையை ஆக.8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

முன்னதாக, நீதிமன்றத்துக்கு வந்த உதயநிதியை வழக்கறிஞர்கள் அறைக்கு அழைத்து சென்று பாலாஜி சிங் அமரவைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் பரமேஷா, ‘‘அமைச்சராக இருந்தாலும், குற்றம்சாட்டப்பட்டிருப்பவர், வழக்கறிஞர் அறையில் எப்படி அமரலாம். பெஞ்ச்சில்தான் உட்கார வேண்டும்’’ என்று வாக்குவாதம் செய்தார். இதனால், வெளியே வந்த உதயநிதி, அங்குள்ள பெஞ்ச்சில் அமர்ந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x