Published : 25 Jun 2024 04:53 PM
Last Updated : 25 Jun 2024 04:53 PM

புனே சொகுசு கார் விபத்து: சிறுவனை விடுவிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

சிறுவன் ஓட்டி விபத்தில் சிக்கிய கார்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மது போதையில் சொகுசு காரை இயக்கி இருவர் உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவனை விடுவிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புனேவில் கடந்த மே மாதம் போர்சே ‘Porsche’ சொகுசு கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். அந்தக் காரை 17 வயது சிறுவன் ஓட்டினார். அவரை விபத்து நிகழ்ந்த இடத்தில் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். பின்னர் காவலர்கள் வசம் ஒப்படைத்தனர். இருந்தும் விபத்து ஏற்படுத்திய 15 மணி நேரத்தில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சிறார் நீதிமன்றம். இதற்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்தது.

அதன் பின்னர் அந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. அந்த சிறுவன் சிறார் கண்காணிப்பு இல்லத்தில் வைக்கப்பட்டார். அதோடு அவரது தந்தை, தாத்தா, தயார் என அனைவர் மீதும் வழக்கை திசை திருப்ப முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டது. அவரது தந்தை கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், சிறுவனை விடுவிக்க உத்தரவு பிறப்பித்தது. சிறார் கண்காணிப்பு இல்லத்தில் இருந்து சிறுவனை விடுவிக்க கோரி அவரது உறவினர் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இந்த தீர்ப்பை இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கியுள்ளது.

அந்த சிறுவன், உறவினர் கண்காணிப்பில் இருப்பார் என தெரிகிறது. மேலும், அவர் உளவியல் நிபுணர்களை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறுவனை கண்காணிப்பு மையத்தில் அடைத்தது சட்டவிரோதமானது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது இந்த வழக்கை கூர்ந்து கவனித்துவரும் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x