Published : 25 Jun 2024 03:21 PM
Last Updated : 25 Jun 2024 03:21 PM

கனமழையால் ஒழுகும் அயோத்தி ராமர் கோயிலின் கருவறை: அர்ச்சகர்கள் புகார்

கோப்புப்படம்

அயோத்தி: கனமழை காரணமாக உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலின் கருவறையின் மேற்கூரையின் மழைநீர் ஒழுகுவதாக கோயிலின் அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கோயிலின் வடிகால் வசதியும் முறையாக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் காரணமாக பகவான் ராமருக்கு அபிஷேகம் செய்வது மிகுந்த சிரமமான காரியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸும் இதனை உறுதி செய்துள்ளார். மழை பெய்த இரவுக்குப் பிறகு அர்ச்சகர்கள் கோயிலைத் திறந்த போது மழைநீர் தரையில் இருப்பதை பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ராமரின் கருவறைக்கு முன்புள்ள பகுதியில் இந்த நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “நாங்கள் அதை சுத்தம் செய்துள்வோம். பக்தர்கள் நின்று சுவாமி தரிசனம் செய்யும் இடத்தில் உள்ள தளத்தில் இருந்து மழைநீர் கசிகிறது. இதனை கோயில் கட்டுமான கமிட்டி குழுவின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளோம். அவர்கள் அதனை அடுத்த சில நாட்களில் சீர் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

கோயில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டுப்பட்டுள்ளது. ஆனால், கோயிலின் அடிப்படை தேவையான வடிகால் வசதி இல்லை. அதனால் பகவான் ராமருக்கு பால் மற்றும் நீரை கொண்டு அபிஷேகம் செய்வது சிரமாமக உள்ளது. அதனால் அர்ச்சகர்கள் கோயிலை சுத்தப்படுத்த அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர். கட்டுமான குழுவினர் அர்ச்சகர்களை ஆலோசிக்காமல் கோயிலை கட்டியதே இதற்கு காரணம்” என ஆச்சாரிய சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.

கோயிலின் கட்டுமான வடிவமைப்பு காரணமாக சில இடங்களில் மழை நீர் கசிகிறது. அதே நேரத்தில் சில இடங்களில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த பின்னர் மழை நீர் கசிவு இருக்காது என ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர தலைவர் நிருபேந்திர மிஸ்ரா. மேலும், கோயிலின் முதல் தளத்தில் மழை நீர் கசிவு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரூ.1,800 கோடியில் ராமர் கோயில் கட்டுமானம்: ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1,800 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. ராமர் கோயில் வளாகத்தின் பரப்பளவு 70 ஏக்கர் ஆகும். அதில் 2.7 ஏக்கர் பரப்பளவில் 161 அடி உயரத்தில் பிரதான கோயில் அமைந்துள்ளது. 12 நுழைவாயில்களும் 3 தளங்களும் கொண்டதாக இது கட்டப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளை எல்&டி மற்றும் டாடா கன்சல்டிங் இன்ஜினீயர்ஸ் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. தேவையான தொழில்நுட்ப உதவிகளை ஐஐடி வழங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x