Published : 24 Jun 2024 01:12 PM
Last Updated : 24 Jun 2024 01:12 PM

“மோடி அரசு அரசியல் சாசனத்தை மீறிவிட்டது” - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இடைக்கால சபாநாயகர் தேர்வு விஷயத்தில் நரேந்திர மோடி அரசு அரசியல் சாசனத்தை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, பர்த்ருஹரி பஹதாப் மக்களவைக்கு வந்து இடைக்கால சபாநாயகர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும், புதிய உறுப்பினர்களுக்கு அவர் பதவிப் பிராமாணம் செய்து வைத்தார். முதல் உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

இதனிடையே, இடைக்கால சபாநாயகர் தேர்வு விஷயத்தில் நரேந்திர மோடி அரசு அரசியல் சாசனத்தை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் சாசன புத்தகத்தை கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம் என்றும் அரசியல் சாசனம் வாழ்க என்றும் முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக எம்பிக்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், டிம்பிள் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்ள் சுதிப் பந்தோபாத்யாய, சவுகதா ராய், கல்யாண் பானர்ஜி உள்ளிட்ட ஏராளமான எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “அரசியல் சாசனத்தை சிதைக்க பிரதமர் மோடி முயல்கிறார். அதனால்தான் இன்று அனைத்து கட்சித் தலைவர்களும் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். இங்கே காந்தி சிலை இருக்கிறது. அரசியல் சாசனத்தின்படி செயல்பட வேண்டும் என்பதை மோடிக்கு உணர்த்தவே இந்த ஆர்ப்பாட்டத்தை நாங்கள் நடத்தினோம்” எனத் தெரிவித்தார்.

இதேபோல், செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “அரசியல் சாசனத்துக்கு எதிராக மோடியும், அமித் ஷாவும் தாக்குதல் நடத்துவதை எங்களால் ஏற்க முடியாது. அது நிகழ நாங்கள் விட மாட்டோம். நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும்போது கைகளில் அரசியல் சாசன புத்தகத்தை கைகளில் ஏந்தியபடிதான் பதவியேற்போம். எந்த ஒரு சக்தியும் இந்திய அரசியல் சாசனத்தை தொட முடியாது என்ற எங்களின் செய்தி நாடு முழுவதும் சென்றடைந்து கொண்டிருக்கிறது” எனக் கூறினார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, “அரசியல் சாசன கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளதால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இடைக்கால சபாநாயகர் தேர்வு விஷயத்தில் மோடி அரசு அரசியல் சாசனத்தை, நாடாளுமன்ற மரபுகளை மீறிவிட்டது தெளிவான ஒரு விஷயம்” எனக் குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x