Published : 24 Jun 2024 06:13 AM
Last Updated : 24 Jun 2024 06:13 AM

18-வது மக்களவையின் முதல் கூட்டம் இன்று தொடக்கம்: புதிய எம்.பி.க்கள் பதவியேற்கின்றனர்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் 18-வதுமக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாஜகதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 9-ம் தேதி, நாட்டின் பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து, புதிய மக்களவையின் முதல் கூட்டம் 24-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்களவையின் தற்காலிக தலைவராக பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹதாப் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்தார்.

இந்நிலையில், 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில், தற்காலிக மக்களவைத் தலைவர் பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதையடுத்து, மற்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். இன்று மொத்தம் 280 உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர். நாளை மீதமுள்ள 263 உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர்.

இதைத் தொடர்ந்து 26-ம் தேதி மக்களவைத் தலைவர் தேர்தல் நடைபெறும். 27-ம் தேதி இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x