Published : 23 Jun 2024 06:48 PM
Last Updated : 23 Jun 2024 06:48 PM

மருமகன் ஆகாஷ் ஆனந்தை மீண்டும் தனது அரசியல் வாரிசாக அறிவித்தார் மாயாவதி

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக மீண்டும் அறிவித்தார். மேலும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியும் ஆகாஷ் ஆனந்துக்கு மீண்டும் அளிக்கப்பட்டது. லக்னோவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்துக்கு பின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாயாவதியின் அண்ணன் ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த். லண்டனில் எம்பிஏ படித்தவர். கடந்த 2017-ல் உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் மாயாவதியுடன் இணைந்து செயல்பட்டார். 2019 மக்களவைத் தேர்தலின்போதும் கட்சியின் முக்கிய முகமாக ஆகாஷ் அறியப்பட்டார். கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். கடந்த டிசம்பரில் ஆகாஷை தனது அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்தார்.

தொடர்ந்து, கடந்த மே மாதம் மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்பப் பெறுவதாக மாயாவதி அறிவித்தார். ஆகாஷ் ஆனந்த் அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை அவர் கட்சிப் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக மாயாவதி கூறினார்.

ஆகாஷ் ஆனந்த் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை மாயாவதி தெரிவிக்கவில்லை. ஆனால், பாஜகவை விமர்சித்து பேசியதால் தான் அவர் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

முன்னதாக, ஏப்ரல் மாத இறுதியில், சீதாபூரில் நடந்த தேர்தல் பேரணியில் ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி, நடத்தை விதிகளை மீறியதாக ஆகாஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சீதாபூர் பேரணியில் பேசிய ஆகாஷ் ஆனந்த், “இந்த அரசாங்கம் ஒரு புல்டோசர் அரசு, துரோகிகளின் அரசு. தனது இளைஞர்களை பசியுடன் விட்டுவிட்டு, தனது முதியவர்களை அடிமைப்படுத்தும் ஒரு பயங்கரவாத அரசு. ஆப்கானிஸ்தானில் தலிபான் போன்று பாஜக அரசாங்கத்தை நடத்துகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க பாஜக அரசு தவறிவிட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் 16,000 கோடி ரூபாய் எடுத்த திருடர்களின் கட்சி பாஜக.” என்று கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x