Published : 23 Jun 2024 05:45 PM
Last Updated : 23 Jun 2024 05:45 PM

“கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” - நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: “கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்தவர்களில் 56 பேர் இறந்துள்ளனர். பலர் உயிருக்குப் போராடி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பட்டியலின மக்கள். இந்த சம்பவத்தை கண்டிக்கிறேன். இதற்கு எதிராக காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட பேசாதது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழக அரசால் நடத்தப்படும் ‘டாஸ்மாக்’ எனப்படும் கடைகளில் உரிமம் பெற்ற மதுபானங்கள் கிடைக்கும் நிலையில், அதையும் மீறி கள்ளக்குறிச்சி நகரின் மையத்தில் ரசாயனம் கலந்த சட்டவிரோத கள்ளச் சாராயம் கிடைக்கிறது.

இதற்கு எதிராக காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எங்கே?. ராகுல் காந்தி எங்கே?. கள்ளச் சாராயத்தால் பட்டியலின மக்கள் இறக்கும் போது, ​​ராகுல் காந்தியிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்பி சம்பித் பத்ரா, “தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் பருகி 56 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 200 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது ஒரு முக்கியமான பிரச்சினை.

மல்லிகார்ஜுன் கார்கே, பிரியங்கா காந்தி வத்ரா, ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் திமுகவினர் உட்பட இண்டியா கூட்டணியினர் இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

கள்ளச் சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். இந்த சம்பவத்தில் பட்டியலினத்தவர்கள் 32 பேர் உயிரிழந்துள்ளதால், நான் அதை கொலை என்று சொல்வேன். இது மரணம் அல்ல.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவராக அறியப்படும் கோவிந்தராஜின் சாராயக் கிடங்கு நகரின் மையப் பகுதியில் பரபரப்பான தெருவில் அமைந்துள்ளது. இன்னொரு மிகப்பெரிய விஷயம் கோவிந்தராஜின் வீட்டுக்கு வெளியேயும், உள்ளேயும் திமுக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அப்படியானால் முதல்வர் ஸ்டாலினிடம் எனது கேள்வி, இந்தச் சம்பவத்தில் நீங்கள் உடந்தையா, இல்லையா?. என்பது தான். உங்கள் சார்பாக யார் பதில் சொல்வார்கள்.

இந்தப் பிரச்சினையை எழுப்புவது தங்களின் அரசியலுக்கு நல்லது இல்லை என்பதால் பெரும்பாலான கட்சிகள் அமைதி காக்கின்றன.” என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x