Published : 21 Jun 2024 04:34 AM
Last Updated : 21 Jun 2024 04:34 AM

யுஜிசி நெட் தேர்வு ரத்து: சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு பரிந்துரை

புதுடெல்லி: இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்வதற்கும் இளநிலை ஆராய்ச்சிக்கான நிதியுதவி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்காக தேசிய தேர்வு முகமை சார்பில் யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது.

இவ்வாண்டுக்கான தேர்வு கடந்த செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக கணினி வழியாகநடைபெற்ற நெட் தேர்வு இம்முறை ஓஎம்ஆர் சீட் முறையில் நடைபெற்றது.

இந்நிலையில், யுஜிசி நெட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் கிடைத்திருப்பதாகக் கூறி நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் நேற்றுமுன்தினம் அறிவித்தது.

புதிய தேர்வு தேதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும், இந்த முறைகேடுகள் குறித்த விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நேற்று மத்திய கல்வித் துறை இணைச் செயலர் கோவிந்த் ஜெய்ஸ்வால் கூறுகையில், “கடந்த ஜூன் 18-ம்தேதி நடத்தப்பட்ட யுஜிசி நெட் தேர்வில் 11 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இந்தத் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் மறுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிற நிலையில்,யுஜிசி நெட் தேர்வில் முறைகேடுநடைபெற்றிருப்பதாக அந்தத்தேர்வை மத்திய அரசே ரத்துசெய்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x