Published : 30 Aug 2014 10:56 AM
Last Updated : 30 Aug 2014 10:56 AM

ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: ராணுவம், அணுசக்தி துறைகளில் முக்கியப் பேச்சு

நான்கு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். இன்று காலை 6 மணி அளவில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

அரசு முறைப் பயணமாக இந்தியத் துணைக் கண்டத்துக்கு வெளியே பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இந்தப் பயணத்தின் போது, ராணுவம், ஆக்கப்பூர்வமான அணுசக்தி, உள்கட்டமைப்பு மேம்பாடு, பூமியில் அரிதாகக் கிடைக்கும் வளங்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என்று தெரிகிறது.

புதிய சகாப்தம் உருவாகும்:

ஜப்பான் புறப்பட்டுச் செல்லும் முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நரேந்திர மோடி கூறியதாவது: இந்தியா, ஜப்பான் உறவில் புதிய அத்தியாயம் தொடங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஜப்பானுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. என்னுடைய பயணத்தின் மூலம் இருநாடுகளிடையேயான உறவில் புதிய அத்தியாயம் தொடங்கும். அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சாரரீதியில் இரு நாடுகளும் மிகவும் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளன. இந்திய அணுசக்தி கொள்கையில் மறுஆய்வு இல்லை.

பாகிஸ்தான் அரசு தரப்பில் ஹூரியத் தலைவர்களை சந்தித்தது அதிருப்தி அளிக்கிறது. எனினும் அந்த நாட்டுடன் அமைதி, நட்புறவை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடரும் என்று அவர் கூறினார்.

கியோடோ பயணம்

பிரதமரின் சுற்றுப்பயணத்திலேயே கியோடோ நகருக்கு அவர் மேற்கொள்ளவிருக்கும் பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும் என்ற பிரதமரின் கனவு திட்டத்தினை செயல்படுத்த கியோடோ பயணம் உதவும் என கூறப்படுகிறது. கியோடோ ஜப்பானில் ஒரு ஸ்மார்ட் நகரமாகும். கலாச்சார செறிவும், நவீனத்துவமும் இந்த நகரில் ஒருங்கே இணைந்திருக்கும் என்பது சிறப்பாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x