Published : 13 Jun 2024 03:34 PM
Last Updated : 13 Jun 2024 03:34 PM

நீட் தேர்வு முறைகேடு சர்ச்சை: மத்திய அரசின் மறுப்பும், காங்கிரஸ் விமர்சனமும்

நீட் எதிர்ப்புப் போராட்டம் | கோப்புப் படம்: ஷிவ் குமார் புஷ்பாகர்

புதுடெல்லி: இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசியவில்லை என்றும், அவ்வாறு கசிந்ததாகக் கூறப்படுவதில் எந்த ஆதாரமும் இல்லை என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சராக தர்மேந்திர பிரதான் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. வினாத்தாள் கசியவில்லை. வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை இந்த ஆண்டு 24 லட்சம் மாணவர்கள் எழுதி இருக்கிறார்கள். இதில், சுமார் 1,500 மாணவர்கள் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. நீதிமன்றத்துக்கு பதில் அளிக்க அரசு தயாராக இருக்கிறது. இந்த குறிப்பிட்ட விஷயத்தைக் கருத்தில் கொண்டு கல்வியாளர்களைக் கொண்ட குழு ஒன்றை அரசு அமைத்திருக்கிறது.

நீட் தேர்வில் பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது போன்ற ஒரு சூழல் உருவாக்கப்படுகிறது. தேசிய தேர்வு முகமை 3 முக்கிய தேர்வுகளை நடத்துகிறது. நீட், ஜேஇஇ, க்யூட் ஆகிய தேர்வுகளை அது வெற்றிகரமாக நடத்தி வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் அதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நீதி வழங்குவதில் தேசிய தேர்வு முகமை உறுதியாக இருக்கிறது என்பதை நான் அவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அந்த 1,560 மாணவர்களுக்கும் நீதிமன்றம் கூறும் முறைப்படி தேர்வு நடத்தப்படும். அதற்காக, கல்வியாளர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்போம்" என தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய், "நீட் தேர்வு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை விஷயத்தில் பாஜக அரசின் அணுகுமுறை பொறுப்பற்றதாகவும், உணர்வற்றதாகவும் உள்ளது.

சுமார் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள இந்த முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். பல்வேறு பயிற்சி மையங்கள் கொடுத்த வாக்குறுதிகளால், சாதாரண குடும்பங்கள் ரூ.30 லட்சம் வரை செலவழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நீட் முறைகேடு விவகாரத்தில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பிரதமர் மோடி பதவியேற்பு விழாக்களில் கலந்துகொள்வதிலும், வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபடுவதிலும் மும்முரமாக இருக்கிறார். இந்த பிரச்சினையை முன்னெடுத்துச் செல்வதில் இண்டியா கூட்டணி உறுதியாக இருக்கிறது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு மண்டியிட்டு மாணவர்களுக்கு பொறுப்புகூற வைக்கும் அளவுக்கு இம்முறை இண்டியா கூட்டணி வலிமையாக உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் ஏன் ஜூன் 4-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதற்கு பதில் வேண்டும். ஆனால், அரசு, விவாதத்தை தவிர்க்க விரும்புகிறது" என தெரிவித்தார்.

பின்னணி: இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை, மே 5ம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 4,750 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 4ம் தேதியே முடிவுகள் வெளியாகின. முன் எப்போதும் இல்லாத அளவு இந்த முறை 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண்ணை பெற்றிருந்தனர். ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். இது முறைகேடு நடத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்ற சந்தேகத்தை எழுப்பியது.

இதையடுத்து, நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை உச்ச நீதிமன்ற விடுமுறை கால இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஹ்ஸானுதீன் அமானுல்லா இணைந்து விசாரித்தனர். தேர்வை ரத்து செய்வது, மறுதேர்வு மற்றும் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்களை ரத்து செய்வது குறித்த மூன்று மனுக்கள் விசாரிக்கப்பட்டன.

தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரேஷ் கவுசிக், “கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 பேருக்கு மறுதேர்வு நடத்தப்படும். இதற்கு அறிவிப்பு இன்று (வியாழக்கிழமை) வெளியாகும். மறுதேர்வு ஜூன் 23-ம் தேதியும், அதன் முடிவுகள் 30-ம் தேதியும் வெளியாகும்” என்று தெரிவித்தார். அப்போது, கலந்தாய்வு பணிகள் பாதிக்கப்படாத வகையில் மறுதேர்வை விரைந்து நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x