Published : 13 Jun 2024 04:39 AM
Last Updated : 13 Jun 2024 04:39 AM

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் ரஜினிக்கு முக்கியத்துவம்

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாடு நேற்று 4-வது முறையாக ஆந்திர முதல்வராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்துடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அருகில் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பிரபுல் படேல் உள்ளிட்டோர். படம்: பிடிஐ

விஜயவாடா: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்துகொண்டார். நேற்று காலை சிரஞ்சீவியும், ரஜினி காந்த் தம்பதியும் ஒன்றாக விழா மேடைக்கு வந்தனர். அதன் பின்னர், மேடையில் இருந்த சிறப்பு அழைப்பாளர்களான முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு, முன்னாள் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோரை ரஜினி சந்தித்து பேசினார்.

இவர்களை தொடர்ந்து மேடைக்கு வந்த மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ஜேபி நட்டா ஆகியோரும் ரஜினியுடன் கை குலுக்கி பேசினர். முதல்வராக பதவியேற்ற பிறகு ரஜினியை பார்த்ததும் சந்திரபாபு நாயுடு அவரிடம் சென்று கட்டியணைத்து நன்றி தெரிவித்தார். பதிலுக்கு ரஜினியும் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர்கள் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோர் ரஜினி அருகில் அமர்ந்திருந்தனர். சிரஞ்சீவியும் ரஜினியும் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்தனர். கடைசியாக விழா முடிந்த நிலையில், பிரதமர் மோடியும் ரஜினியை சந்தித்து கை குலுக்கி பேசினார். ஒரே மேடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோரை பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x