Published : 12 Jun 2024 05:47 AM
Last Updated : 12 Jun 2024 05:47 AM

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா: திபெத்தில் பல இடங்களுக்கு புதிய பெயர் சூட்ட திட்டம்

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் பலஇடங்களுக்கு சீனா புதிய பெயர்சூட்டிவரும் நிலையில் அந்நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திபெத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு புதிய பெயர் சூட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறிவரும் சீனா அங்குள்ள பல இடங்களுக்கு தன்னிச்சையாக புதிய பெயரை சூட்டி வருகிறது.

சீனா முதன்முதலில் கடந்த 2017-ல் அருணாச்சல பிரதேசத்தின் 6 இடங்களுக்கு புதிய பெயர் சூட்டியது. இதையடுத்து 2021-ல் 15இடங்களுக்கும் 2023-ல் 11 இடங்களுக்கும் புதிய பெயர்களை அறிவித்தது.

சீனா கடைசியாக கடந்த மார்ச் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு நெடுகிலும் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள்,ஓர் ஏரி, ஒரு கனவாய் மற்றும் ஒரு நிலப் பகுதிக்கு புதிய பெயர்களை சூட்டியது.

சீனாவின் இந்த நடவடிக்கையை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அருணாச்சல பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அங்குள்ள இடங்களுக்கு மறுபெயர் சூட்டுவதால் யதார்த்த நிலை எந்தவிதத்திலும் மாறிவிடாதுஎன்றும் வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு வருகிறது.

இந்நிலையில் சீனாவின் இந்தநடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டின் தன்னாட்சிப் பகுதியான திபெத்தில்20-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு புதிய பெயர் சூட்ட இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயர் மாற்றம் செய்யப்பட உள்ள இடங்களின் பட்டியல்ராணுவத்தின் மூலம் இறுதி செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரிவான வரலாற்று ஆராய்ச்சிமற்றும் சீனப் பெயர்களை எதிர்க்கும் உள்ளூர் மக்களின் கருத்துகளின் அடிப்படையில் புதிய பெயர்கள் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

ராஜ்நாத் சிங்கை பாதுகாப்புத் துறை அமைச்சராக பிரதமர் நரேந்திர மோடி தக்கவைத்துள்ள நிலையில், விரைவில் இந்தப் பெயர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x