Published : 12 Jun 2024 06:09 AM
Last Updated : 12 Jun 2024 06:09 AM

ஆந்திர அமைச்சரவை இன்று காலை பதவியேற்பு: பிரதமர் நரேந்திர மோடி வருகை

விஜயவாடாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆந்திர பேரவையில் தெலுங்கு தேசம் கூட்டணி கட்சிகளின் தலைவராக தேர்வு செய்ததற்காக கூட்டணி கட்சியினருக்கு சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்தார்.

விஜயவாடா: ஆந்திராவின் தலைநகரம் அமராவதிதான் என, ஆந்திர மாநிலமுதல்வராக இன்று பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு உறுதிபட தெரிவித்தார்.

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம்தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகளைச் சேர்ந்த 162 எம்எல்ஏ.க்கள் பங்கேற்றனர். இதில் ஆந்திர மாநில சட்டப்பேரவை தெலுங்கு தேசம் கூட்டணி கட்சிகளின் தலைவராக சந்திரபாபுநாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

என்னை கூட்டணி கட்சி சார்பில்தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. மக்கள் நம் மீதுவைத்துள்ள நம்பிக்கையை தெரிவித்து விட்டனர். அதற்காக நாம் இனிமக்கள் மேம்பாட்டுக்காக பாடுபட வேண்டும்.

மக்களின் இந்த மகத்தான தீர்ப்பால்தான் நமக்கு டெல்லியில் பெருமை கிடைத்துள்ளது. பவன் கல்யாணின் உறுதுணையை நான் எப்போதும் மறக்க மாட்டேன். நான்சிறையில் இருந்தபோது, என்னைவந்து பார்த்த பவன் கல்யாண், கண்டிப்பாக நாம் கூட்டணி அமைப்போம். நம்முடன் பாஜகவும் இணையும் என உறுதிபட கூறினார். அதன்படியே கூட்டணி அமைத்தோம். மாபெரும் வெற்றியை பெற்றுள்ளோம்.

மத்திய அரசின் உதவி அவசியம்: மாநில வளர்ச்சி திட்டங்களுக்காக மத்திய அரசின் உதவி மிகஅவசியம். புதன்கிழமை (இன்று) முதல்வராக பதவியேற்க உள்ளேன். இவ்விழாவிற்கு பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர்கள் வர உள்ளனர். ஆந்திர மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என ஏற்கனவே இவர்கள் வாக்கு கொடுத்துள்ளனர். வாக்காளர்கள் கொடுத்துள்ள இந்த தீர்ப்பு ஆந்திர மாநில வரலாற்றில் இடம் பெற்று விட்டது.

பதவி வந்து விட்டது என ஆணவம் வந்து ஆடினால் இது தான் கதிஎன்பதை மக்கள் உணர்த்தி உள்ளனர். தவறு செய்தவர்களை மன்னித்தால், அதுவே அவர்களுக்கு பழக்கமாகி விடும். என்பதால் சட்டப்படி தவறு செய்தவர்களுக்கு தண்டனையும் கண்டிப்பாக கிடைக்கும். பழி வாங்கும் அரசியல் இருக்காது. ரவுடிஅரசியல், அராஜக அரசியலுக்கு முற்று புள்ளி வைக்கப்படும். இனி முதல்வர் வந்தால், மக்களுக்கு எந்தவிதத்திலும் இடையூறு இருக்காது.

என்னை இதற்கு முந்தைய ஆட்சியில் சட்டப்பேரவையிலேயே அவமதித்தனர். அப்போது நான்இது கவுரவர்கள் சபை அல்ல. கவுரவமான சபை என கூறினேன். இனி நான் இச்சபைக்கு வரப்போவதில்லை. அப்படியே வந்தாலும். முதல்வராகத்தான் கால் பதிப்பேன் என சூளுரைத்து விட்டு வந்தேன். என்னுடைய சபதத்தை மக்கள் நிறைவேற்றி உள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். போலவரம் அணைக்கட்டும் திட்டம் 72 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு விட்டது. கடந்தஆட்சியில் இதனை கண்டுகொள்ள வில்லை. இனி இந்த அணை பூர்த்திசெய்யப்படும். நதிகள் இணைப்புதிட்டமும் மேற்கொள்ளப்படும். அமராவதிதான் ஆந்திராவின் தலைநகராக இருக்கும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

கூட்டணி கட்சிகளின் சார்பில் சந்திரபாபு நாயுடு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தையும், ஆந்திர ஆளுநர் நசீர் அகமதிடம் பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி, மற்றும் தெலுங்குதேசம், ஜனசேனா கட்சி பிரதிநிதிகள் கொண்டு போய் கொடுத்தனர். சந்திரபாபு நாயுடுவை ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுக்கும்படி இவர்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி வருகை: ஆந்திர அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்காக, விஜயவாடா விமான நிலையம் அருகே உள்ள கேசரபல்லி எனும் இடத்தில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு இன்று காலை 11.27 மணிக்கு சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி பிரமாணம் செய்ய உள்ளார். மேலும் இவருடன் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், நடிகர் பாலகிருஷ்ணா, மகன் லோகேஷ் உட்பட பலர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர். இதில் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமென பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உட்பட மேலும் சில மத்திய அமைச்சர்கள், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நடிகர்கள் ரஜினி காந்த், சிரஞ்சீவி மற்றும் பல அரசியல், சினிமா பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x