Published : 09 Jun 2024 09:48 PM
Last Updated : 09 Jun 2024 09:48 PM

மோடி 3.0 | மத்திய அமைச்சரவை பதவி இழந்தவர்கள் யார் யார்?

ஸ்மிருதி இரானி, அனுராக் தாக்குர், ராஜீவ் சந்திரசேகர்

புதுடெல்லி: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருடன் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்களும் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த சூழலில் கடந்த 2019 முதல் 2024 வரையிலான பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பிடித்து, இந்த முறை பதவியை இழந்தவர்கள் யார் யார்? என்பதை பார்ப்போம்.

புதிதாக அமைந்துள்ள மத்திய அமைச்சரவையில் 24 மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மொத்தம் 72 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

பதவியை இழந்தவர்கள் யார் யார்? - இமாச்சல் பிரதேசத்தின் ஹமிர்பூர் மக்களவைத் தொகுதியில் 2008 இடைத்தேர்தல் முதல் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் அனுராக் தாக்குர். சுமார் 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருந்தும் அவருக்கு புதிய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஸ்மிருதி இரானி: பிரதமர் மோடியின் 2014 முதல் 2024 வரையிலான ஆட்சியில் பல்வேறு பொறுப்புகளை கட்சி மற்றும் ஆட்சியில் கவனித்தவர் ஸ்மிருதி இரானி. கடந்த 2019 தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை வீழ்த்தினார். 2024 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கிஷோர் லால் சர்மாவிடம் தோல்வியை தழுவினார். அவர் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதே போல மத்திய தகவல் தொழில்நுட்ப துறையின் இணை அமைச்சராக இருந்த ராஜீவ் சந்திரசேகர், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சராக இருந்த பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் வாய்ப்பு பெறாதவர்கள்:

தேர்தலில் வெற்றி: அஜய் பாட், நாராயண் ரானே.
தேர்தலில் தோல்வி: சாத்வி நிரஞ்சன் ஜோதி, ஆர்.கே. சிங், அர்ஜுன் முண்டா, நிஷித், அஜய் மிஷ்ரா, சுபாஸ் சர்க்கர், பார்தி பவார், ராவ்சாஹேப், கபில் பாட்டீல்.
தேர்தலில் போட்டியில்லை: மீனாட்சி லேகி, வி.கே.சிங், அஸ்வினி குமார் சவுபே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x