Published : 09 Jun 2024 05:44 PM
Last Updated : 09 Jun 2024 05:44 PM

பிரதமர் மோடி பதவியேற்பு விழா: 7 நாட்டுத் தலைவர்கள் டெல்லி வருகை

புதுடெல்லி: டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இதையொட்டி 7 நாட்டுத் தலைவர்கள் டெல்லி வந்தடைந்துள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், தனிப் பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை. அதேநேரம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வென்று ஆட்சியை 3- வது முறையாக தக்கவைத்துக் கொண்டது.

பிரதமர் மோடி ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர் 3வது முறையாக நாட்டின் பிரதமராகும் ஒரே நபர் என்ற அந்தஸ்த்தைப் பெறுகீறார். நேரு 1952, 1957, 1962 தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மும்முறை பிரதமராக இருந்தார். இந்நிலையில் தற்போது மோடி 2014, 2019, 2024 என மூன்று முறையாக பிரதமராகிறார்.

7 தலைவர்கள் வருகை: மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமால் தாஹல் பிரச்சந்தா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுகனாத், பூட்டான் பிரதமர் ஷெரிங் டாக்பே ஆகியோர் இன்று டெல்லி வந்தடைந்தனர். வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா, செசல்ஸ் துணை அதிபர் அகமது ஆஃபீஃப் ஆகியோர் நேற்றே (ஜூன் 8) இந்தியா வந்தடைந்தனர். இவர்களில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் வருகை மிகுந்த கவனம் பெற்றுள்ளது. காரணம் அண்மையில் மாலத்தீவு - இந்தியா இடையே நிலவிய அரசியல் சர்ச்சைகள்.

புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற உள்ளதால் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக குடியரசுத் தலைவர் மாளிகை பகுதியில் 5 கம்பெனி துணை ராணுவப் படையினர், தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள், ட்ரோன்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தரை முதல் வான்பகுதி வரையில் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியா வந்துள்ள பூட்டான் பிரதமர் ஷெரிங் டாக்பே கூறுகையில், “இந்தியா அபார வளர்ச்சி கண்டுள்ளது. சாலைகள், ரயில், விமான சேவைகள் என உள்கட்டமைப்பு வளர்ச்சியில் இந்திய வளர்ச்சி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாக உள்ளது” என்றார்.

கவனம் பெற்ற தேநீர் விருந்து: மோடி இல்லத்தில் இன்று (ஜூன் 9) தேநீர் விருந்து அளித்தார். இதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக சொல்லப்படும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் இன்று மாலை பிரதமருடன் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் மோடியின் புதிய அமைச்சரவையில் பாஜக-வின் மனோகர் லால் கட்டார், சிவராஜ் சிங் சவுகான், சஞ்சய் குமார் மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் தெலங்கானா பாஜக மாநில தலைவர் கிஷண் ரெட்டி, பியூஷ் கோயல், ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான் ஆகியோரும் இருந்தனர்.

இந்த தேநீர் விருந்தில் அமித் ஷா, நட்டா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜூ, ஜோதிராதித்ய சிந்தியா, நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, நித்யானந்த் ராய், ஹர்ஷ் மல்ஹோத்ரா, சி.ஆர்.பாட்டீல், ஜித்தன் பிரசாத் ஆகியோரும் பங்கேற்றனர்.

சிவசேனாவின் பிரதாப்ராவ் ஜாதவ், எல்ஜேபி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான், ஆர்எல்டி கட்சியின் ஜெயந்த் சிங், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி, ஜித்தன் ராம் மஞ்சி, ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி சில முக்கிய அறிவுரைகளை வழங்கியதாக தகவல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x