Published : 09 Jun 2024 01:31 PM
Last Updated : 09 Jun 2024 01:31 PM

“இடஒதுக்கீடு நிலைபாட்டில் மாற்றமில்லை” - தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., ராம்மோகன் பேச்சு

ராம்மோகன் நாயுடு

புதுடெல்லி: “தெலுங்கு தேசம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை, இடஒதுக்கீடு குறித்த எங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை” என்று தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.,யும் மத்திய அமைச்சராக உள்ள ராம்மோகன் நாயுடு கிஞ்சராபு தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிக்கு மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவி ஏற்க உள்ள மோடியுடன், அவரது அமைச்சரவையில் மத்திய அமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி., ராம்மோகன் நாயுடுவும் பதவி ஏற்க உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நீண்ட நாட்களுக்கு பின்பு தெலுங்கு தேசம் கட்சிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கிறது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். மத்திய அரசின் தனி கவனம் எங்கள் மீது உள்ளது.

ஆந்திராவின் முன்னேற்றமே எங்களின் நோக்கம். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள தெலுங்கு மக்களின் நலனுக்காக எங்களின் பணியினைத் தொடர்வோம். மக்கள் எங்களுக்கு சிறந்த ஆணைகளை வழங்கியுள்ளனர். நரேந்திர மோடியின் உதவியுடன் ஆந்திராவுக்கான வளர்ச்சியை கொண்டுவர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்களிடம் எந்த கோரிக்கையும் இல்லை. பாஜகவுடனான எங்களின் உறவு வலுவாக உள்ளது. முறையான பேச்சுவார்த்தை முடிந்த பின்னரே நாங்கள் முடிவு எடுப்போம். இடஒதுக்கீடு குறித்த எங்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை" எனத் தெரிவித்தார்.

முன்னதாக மே 5ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, “ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடுக்கு தங்களின் கட்சி ஆதரவு அளிக்கிறது, மேலும் அது தொடரும்” என்று தெரிவித்திருந்தார்.

இன்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ள மோடி தலைமையிலான அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு, ஒரு மத்திய அமைச்சர், ஒரு மத்திய இணை அமைச்சர் பதவி கிடைக்க இருப்பதாக காலையில் டிடிபி கட்சி உறுதி செய்திருந்தது.

மோடி 3.0-வின் இளம் அமைச்சர்: ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்மோகன் நாயுடு கிஞ்சராபு தான் மோடி 3.0 அமைச்சரவையின் மிகவும் இளம் அமைச்சர். 36 வயதான ராம்மோகன் நாயுடு தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எர்ரான் நாயுடுவின் மகன். இவர் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் இருந்து கடந்த 2014ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்றைய மத்திய அமைச்சரவையில் இளம் அமைச்சராக பொறுப்பேற்க உள்ள ராம்மோகன், இளம் வயதில் மத்திய அமைச்சரான தனது தந்தையின் சாதனையை முறியடித்திருப்பதுடன் அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்கிறார். ராம்மோகனின் தந்தை எர்ரான் நாயுடு 1996ம் ஆண்டு மத்திய அமைச்சராக தனது 39 வயதில் அமைச்சராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்மோகன் நாயுடு, தெலுகு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராகவும், 17வது மக்களவையின் தெலுங்கு தேசம் கட்சி எம்பிகள் குழுவின் தலைவராகவும் இருந்தார். கடந்த 202ம் ஆண்டு சிறந்த எம்.பி.,யாக சிறப்பான பணிக்காக சன்சத் ரத்னா விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x