Published : 06 Jun 2024 05:42 AM
Last Updated : 06 Jun 2024 05:42 AM

முதல்வர் பதவியில் இருந்து விலகினார் நவீன் பட்நாயக்: ஒடிசாவில் ஆட்சி அமைக்கிறது பாஜக

புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து நவீன் பட்நாயக் விலகினார். இதையடுத்து, அவர் தலைமையிலான 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

மக்களவை தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் உள்ள 147 இடங்களில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆளும் பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் 14, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 மற்றும் 3 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

ஒடிசாவில் ஆட்சி அமைக்க 74 இடங்கள் தேவை என்ற நிலையில், 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பிஜு ஜனதா தளம் ஆட்சியை இழந்தது. இதையடுத்து, 24 ஆண்டுகளாக தொடர்ந்து முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் நேற்று பதவி விலகினார். புவனேஸ்வரில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநர் ரகுவர்தாஸிடம் ராஜினாமா கடிதம் வழங்கினார்.

ஒடிசா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக்கின் (ஜனதா தளம்) மகன் நவீன் பட்நாயக். இவர் கடந்த 1997 டிசம்பர் 26-ம் தேதி பிஜு ஜனதா தளம் கட்சியை தொடங்கினார். 2000-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பிஜு ஜனதா தளம் - பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, அதே ஆண்டு மார்ச் 5-ம் தேதி நவீன் பட்நாயக் முதல்வரானார்.

அதன் பிறகு, 2004, 2009, 2014, 2019 என தொடர்ந்து 5 சட்டப்பேரவை தேர்தல்களிலும் வெற்றி பெற்று, முதல்வர் பதவியை தக்கவைத்த அவர், தற்போது பேரவை தேர்தலில் பாஜகவிடம் ஆட்சியை இழந்தார்.

இந்தியாவில் நீண்டகாலம் முதல்வர் பதவி வகித்தவர்கள் பட்டியலில் நவீன் பட்நாயக் 2-ம் இடத்தில் (24 ஆண்டு 92 நாட்கள்) உள்ளார். சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங் முதல் இடத்தில் (24 ஆண்டு 165 நாட்கள்) உள்ளார்.

இதற்கிடையே, ஒடிசாவில் முதல்முறையாக ஆட்சியை பிடித்துள்ளதால் உற்சாகம் அடைந்த பாஜகவினர், ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x