Published : 06 Jun 2024 05:37 AM
Last Updated : 06 Jun 2024 05:37 AM

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்வு: பாஜகவுக்கு சந்திரபாபு, நிதிஷ் ஆதரவு கடிதம்

புதுடெல்லி: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் ஆகியோர் ஆதரவு கடிதம் வழங்கியுள்ளனர். இதையடுத்து, மோடி தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் நாளை குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளனர். பதவியேற்பு விழா வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்பதால், பாஜகவுக்கு தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், கூட்டணி பலத்துடன் பாஜக ஆட்சிஅமைக்கிறது. இதற்காக, தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, மஜத உள்ளிட்ட கட்சிகளிடம் பாஜக ஆதரவை கோரியுள்ளது.

தெலுங்கு தேசம் 16 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களிலும், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி 7 இடங்களிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த கூட்டணி கட்சிகளின் ஆதரவையும் பாஜக கோரியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. புதிய அமைச்சரவை பதவியேற்க ஏதுவாக 17-வது மக்களவையை கலைக்க பரிந்துரைத்து இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த மோடி, பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தையும், 17-வது மக்களவையை கலைப்பதற்கான அமைச்சரவை கூட்டத்தின் பரிந்துரையையும் குடியரசுத் தலைவரிடம் வழங்கினார்.

அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், புதிய அரசு அமையும் வரை பதவியில் தொடருமாறு பிரதமரையும், மத்திய அமைச்சரவை குழுவையும் கேட்டுக் கொண்டார்.

இந்த சூழலில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, டெல்லியில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், பிஹார் முதல்வருமான நிதிஷ்குமாரும் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் பிரதமர் மோடியின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான், மஜத தலைவர் எச்.டி. குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின்போது, பிரதமர் மோடிதலைமையில் மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைய, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் நிபந்தனையற்ற ஆதரவு கடிதத்தை பிரதமர் மோடியிடம்வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்வு செய்யப்படுவதாகவும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நாளை (ஜூன் 7) நடைபெற உள்ளது. மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும், கூட்டணி கட்சிகள் சார்பில் மக்களவை குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடிதலைமையில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நாளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர்.

பிரதமர் மோடி பதவியேற்பு விழா வரும்8-ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி 3-வது முறையாக பதவி ஏற்பதன் மூலம், தொடர்ந்து 3 முறை பிரதமராக இருந்த முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்ய உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x