Last Updated : 05 Jun, 2024 10:20 AM

2  

Published : 05 Jun 2024 10:20 AM
Last Updated : 05 Jun 2024 10:20 AM

உ.பி.யில் பாஜகவுக்கு பகீர் பின்னடைவு: சமாஜ்வாதி - காங்., சாத்தியப்படுத்தியது எப்படி?

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிர்பார்க்காத பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தமுறை தேர்தலில் அம்மாநிலத்தின் சமாஜ்வாதி, காங்கிரஸ் வெற்றிக் கூட்டணியாகி விட்டது.

மக்களவை தேர்தலுக்கான 543 தொகுதிகளில் உபியின் 80 மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இதற்கு அம்மாநிலம், இந்தியாவின் இருதயமாக அமைந்திருப்பது காரணம்.

இங்கு அதிக தொகுதிகள் பெரும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்கும் என்பது ஒரு உறுதியான கணிப்பாகவே இருந்து வருகிறது. இதனால், தேசிய ஜனநாயக முன்னணிக்கு தலைமை வகித்த பாஜகவும் உபிக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருந்தது.

எனினும், எவரும் எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகளில், என்டிஏவிற்கு உபியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உபியின் 80 இல் என்டிஏ 2019 இல் 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் அப்னா தளம் 2 தொகுதிகளை பெற்றது.

2014 இல் பாஜக 71, அப்னா தளம் 2 தொகுதிகள் பெற்றன. இந்த இரு தேர்தல்களை விட அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட பாஜகவிற்கு வெறும் 33 கிடைத்துள்ளது.

என்டிஏவின் கூட்டணிகளில் ராஷ்டிரிய லோக் தளம் 2, அப்னா தளம் ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளன. தனித்து போட்டியிட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

முக்கிய வேட்பாளர்களில் மத்திய அமைச்சர்களான ஸ்மிருதி இராணி, அனுப்பிரியா பட்டேல், அஜய் மிஸ்ரா டேனி ஆகியோருக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. மீண்டும் போட்டியிட்ட பாஜக எம்பிகளில் மேனகா காந்தி, சஞ்ஜீவ் பலியான், சாக்ஷி மஹராஜ் உள்ளிட்டோரும் தோல்வி அடைந்துள்ளனர்.

இதன் பின்னணியில் ராமர் கோயிலின் முழுப்பலன் கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இடம் பெற்றிருந்தன. இந்தமுறை, உ.பி.,யின் தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் வியப்புக்கு உள்ளாகி விட்டன.

கடந்த 2019 தேர்தலில் பகுஜன் சமாஜுடன் கூட்டணி வைத்தது சமாஜ்வாதி. இதில் சமாஜ்வாதி பெற்ற ஐந்தை விட அதிகமாக பிஎஸ்பி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

தனித்து போட்டியிட்ட காங்கிரஸில் ரேபரேலியில் சோனியா காந்தி மட்டுமே வெற்றி பெற்றார். 2024 தேர்தலில் சமாஜ்வாதி கட்சியானது காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தது. நேற்று வெளியான முடிவுகளில் சமாஜ்வாதிக்கு 37, காங்கிரஸிற்கு 6 தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளன.

கடைசியாக 2017 உபி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுடன் கைகோர்த்தது சமாஜ்வாதி. இந்த தேர்தலில் இக்கூட்டணியால் 60 தொகுதிகளைக் கூடத் தாண்ட முடியவில்லை.

அப்போது அக்கட்சிகளின் தலைவர்களான அகிலேஷ்சிங் யாதவ் மற்றும் ராகுல் காந்தியை ‘உபிக்கே லடுக்கே (உபியின்பசங்க)’ என பேசப்பட்டனர். இந்த உபியின் இளைஞர்கள் தான் இந்தமுறை தேர்தலில் எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளனர்.

அகிலேஷ் தன் பிரச்சாரத்தில், ஒபிசி, தலீத் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளை முன்னிறுத்தினார். தலித், பழங்குடிகள் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு எனக் கோஷமிட்டார் ராகுல் காந்தி.

இத்துடன் இண்டியா ஆட்சி அமைந்தால் விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிப்பதாகவும் உறுதி அளித்தார். இளைஞர்களின் முக்கிய வேலைவாய்ப்பு களமாக இந்திய ராணுவத்தில் ‘அக்னி வீர்’ முறையை ரத்து செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இதுபோன்ற வாக்குறுதிகள், உபியின் விவசாயிகள், தலித்துகள், இளைஞர்களுடன் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளை பெற்றுத் தந்துள்ளது. இத்தனைக்கும், முதல் மூன்றுகட்ட வாக்குப்பதிவுகள் வரை காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் உபியில் ஒரு பிரச்சாரக் கூட்டமும் நடத்தவில்லை.

ராய்பரேலி, அமேதியில் வேட்புமனுதாக்கலுக்கு பின் ராகுல் உபியின் கன்னோஜ் மற்றும் அலகாபாத் என மொத்தம் ஐந்து கூட்டங்களில் கலந்து கொண்டார். ஆனால், ராகுலின் சகோதரியான பிரியங்கா வத்ரா சுமார் 15 தொகுதிகளில் பிரச்சாரம் செய்திருந்தார்.

சமாஜ்வாதி தலைவரான அகிலேஷ்சிங் உ.பி.,யின் 80 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்திருந்தார். தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி உபியில் மிக அதிகமாக 21 பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் ரோட்ஷோக்களை நடத்தினார்.

இவருடன் கலந்துகொண்ட முதல்வர் யோகி, தனியாக 89 தொகுதிகளிலும் தலா 3 முறை பிரச்சாரம் செய்திருந்தார். இதன் பலனும் பாஜகவிற்கு உபியில் கிடைக்காதது அக்கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாகி விட்டது.

அதிக மக்கள் தொகை கொண்ட உ.பி.யில் முதல்வர் யோகி தலைமையில் தொழில்கள் வளர்ச்சி பெற்று வருவதாகக் கூறப்பட்டது. கல்வி நிலையங்களை கூட்டுவதுடன், சட்டம் ஒழுங்கும் கட்டுப்பாட்டுக்குள் வரும் நிலை இருப்பதாகவும் பெருமிதம் கொள்ளப்பட்டது.

இதுபோன்றவை உண்மை எனில், பாஜகவுக்கு அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் பலன் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x