Last Updated : 04 Jun, 2024 11:42 AM

2  

Published : 04 Jun 2024 11:42 AM
Last Updated : 04 Jun 2024 11:42 AM

பொய்யாகிறதா தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள்? - பாஜக+ Vs இண்டியா இடையே கடும் மோதல்

இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் | கோப்புப்படம்

புதுடெல்லி: கடந்த ஜூன் 1-ல் வெளியான தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்புகள் பொய்யாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணிகளுக்கு இடையே சரிநிகர் மோதல் உருவாகி வருகிறது.

மக்களவை தேர்தலின் கடைசி கட்டமான ஏழாம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ல் நடைபெற்றது. இந்த நாள் மாலையில் பல தனியார் நிறுவனங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்புகளை வெளியிட்டன. இவை அனைத்திலும் பாஜக தலைமையிலான என்டிஏவிற்கு 300 முதல் 400 தொகுதிகள் கிடைக்கும் எனக் கணித்திருந்தன. தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராவது உறுதி எனவும் ஆருடம் கூறியிருந்தன.

இந்நிலையில், இன்று காலை முதல் வெளியாகி வரும் மக்களவை தேர்தலின் முடிவுகள், தேர்தலுக்கு பிந்தையக் கணிப்புகளை பொய்யாக்கி வருகின்றன. காலை 11.00 மணி வரை வெளியான தேர்தல் முன்னணியில் ஆளும் என்டிஏவிற்கு 291, இண்டியாவுக்கு 225 தொகுதிகளில் முன்னணி கிடைத்துள்ளது. இதர கட்சிகளுக்கு 27 தொகுதிகளில் முன்னணி நிலை உள்ளது.

இவற்றில் முக்கிய மாநிலமான உத்தரப் பிரதேசத்திலும் ஆளும், எதிர்கட்சி கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. என்டிஏ தனது 291 முன்னணியில் இருந்தாலும், சில தொகுதிகளில் மிகக்குறைவாக ஓரிரு ஆயிரம் வாக்குகளில் முன்னணி வகிக்கின்றன. இதன்மூலம், இரண்டு கூட்டணிகளுக்கு இடையில் தேசிய அளவில் சரிநிகர் போட்டி நிலவுவதாகத் தெரிந்துள்ளது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதியில் அவர் சற்றே குறைவான வாக்குகளில் முன்னேறி வருகிறார்.

இது பாஜகவை மிகப்பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது. வாரணாசியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் பிரதமர் மோடி இந்த தேர்தலில் கடந்த இரண்டு முறையைக் காட்டிலும் அதிகமான வாக்குகளில் வெற்றிபெறக் குறி வைத்திருந்தார்.

அதேபோல், காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி இரண்டாவதாகப் போட்டியிடும் ரேபரேலியிலும் முன்னணி வகிக்கிறார். இவர் 2019-ல் தோல்வி அடைந்த அமேதியில் மத்திய அமைச்சரான ஸ்மிருதி மீண்டும் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

இவரை காங்கிரஸின் கிஷோரி லால் சர்மா வெற்றிபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது உ.பி.யில் காங்கிரஸை உற்சாகப்படுத்தி விட்டது. இதன் பின்னணியில் அக்கட்சியின் கூட்டணியான சமாஜ்வாதியின் வாக்காளர்கள் ஆதரவும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

உ.பி.யில் கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிகளின் சமாஜ்வாதிக்கு 33-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னணி பெற்றுள்ளது. காங்கிரஸ் சுமார் ஐந்து தொகுதிகள் முன்னணி வகிக்கின்றன.

பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு உ.பி.யில் அமைந்த ராமர் கோயில் பெரும் பலமாகப் பார்க்கப்பட்டது. எனினும், அயோத்யா கோயிலின் பலன் பாஜகவிற்கு உ.பி.யிலாவது கிடைக்குமா? எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

இண்டியா கூட்டணியின் மற்றொரு முக்கியக் கட்சியான திமுகவும் தமிழகத்தில் மறுவெற்றி பெறுவது இண்டியாவை பலப்படுத்தி வருகிறது. பிஹாரிலும் இண்டியா கூட்டணி, என்டிஏவிற்கு சரிநிகரான போட்டியில் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலை, பாஜகவின் தலைமையிலான என்டிஏவிற்கு பின்னடைவாக இருப்பினும், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுகிறது. இம்மாநிலங்களில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் இரண்டிற்கும் அதிகமாக பெற்றுள்ளது.

இருப்பினும், மாலை 6.00 மணி சுமாருக்கு வெளியாகும் பெரும்பாலானத் தொகுதிகளின் முடிவுகள் உண்மையான நிலையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சியே தொடரும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x