Last Updated : 04 Jun, 2024 10:49 AM

 

Published : 04 Jun 2024 10:49 AM
Last Updated : 04 Jun 2024 10:49 AM

‘வெற்றி ஜோடி’ மோடி - யோகி உழைப்பு கேள்விக்குறி ஆகிவிட்டதாக உ.பி. பாஜகவினர் கவலை!

பிரதமர் நரேந்திர மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பாஜகவின் வெற்றி ஜோடியாக இருந்தனர். எனினும், தற்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளில் இருவரது உழைப்பும் கேள்விக்குறியாகி விட்டதாக பாஜகவினர் கருதுகின்றனர். இம்மாநிலத்தில் பாஜக பெரும் பின்னடவை சந்தித்து வருகிறது.

ஏழு கட்டமாக முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் முக்கியப் பிரச்சாரகர்களாக பிரதமர் மோடியும், உ.பி முதல்வர் யோகியும் இருந்தனர். உ.பி.யில் பிரதமர் மோடி 32 ரோட்ஷோக்கள் உள்ளிட்ட 58 கூட்டங்களில் கலந்து கொண்டார். இவற்றில் அவர் முதல்வர் யோகியுடன் இணைந்து 21 பிரச்சாரங்களில் பங்கேற்றார். அது பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இவற்றில் 13 பிரச்சாரக் கூட்டங்களும், 5 ரோட்ஷோக்களும் இடம் பெற்றிருந்தன.

இவற்றை இருவரும் மார்ச் 31 முதல் ஏழாம் கட்டப் பிரச்சாரத்தின் கடைசி நாள் வரை இணைந்து நடத்தினர். இந்த 13 கூட்டங்களில் மீரட், அலிகர், சஹரான்பூர், பிலிபித், அம்ரோஹா, ஆக்ரா, எட்டாவா, பாராபங்கி, லால்கன்ச், வாரணாசி, பஸ்தி, காஜிபூர் மற்றும் மிர்சாபூர் ஆகியன இடம் பெற்றிருந்தன. அதேபோல், 5 ரோட்ஷோக்களான காஜியாபாத், பரேலி, கான்பூர், அயோத்யா மற்றும் வாரணாசி தொகுதிகளிலும் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஜோடி இணைந்திருந்தது. பிரதமர் மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் மட்டும் முதல்வர் யோகி பிரதமருடன் மே 13, 14 தேதிகளில் இரண்டு நாள் இருந்தார்.

வாரணாசியின் கால பைரவர் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில்கள் பிரதமர் மோடி செய்த தரிசனத்திலும் முதல்வர் யோகி உடனிருந்தார். பிரச்சாரங்களின் போது, இருவரும் ஒருவரை மிஞ்சும் வகையில் மதிப்பளித்துக் கொண்டனர். இருவரும் கலந்து கொண்ட பிரச்சாரங்களின் சில முக்கிய காட்சிப்பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இருவரும் இணைந்திருக்கையில், தங்களுக்குள் பரஸ்பரம் நம்பிக்கையை வெளிப்படுத்திக் கொண்டதும், மரியாதையை வெளிப்படுத்தியதும் பார்த்தவர்களை வியப்படையச் செய்தது.

இதன் உதாரணமாக, பிலிபித்தின் கூட்ட மேடையில் முன்னதாக அமர்ந்திருந்தார் பிரதமர் மோடி. அப்போது, மேடை ஏறிய முதல்வர் யோகி, பிரதமரின் முன்பாகக் கடந்து சென்று அவருக்கான நாற்காலியில் அமர மிகவும் தயங்கி நின்றார். இதை புரிந்து கொண்ட பிரதமர் மோடி, முதல்வர் யோகியின் கைகளை பிடித்து அந்த நாற்காலியில் அமர வைத்தார். மற்றொரு காட்சிப்பதிவில், முதல்வர் யோகியால் பிரதமர் மோடிக்கு திரிசூலம் அளிக்கப்பட்ட நிகழ்வும் வைரலானது.

இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்ட 21 நிகழ்வில், உ.பி.க்கு வெளியே 3 பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் இருந்தன. இதில், பேசிய பிரதமர் மோடி, தனது முதல்வர் என யோகியை பெருமையுடன் குறிப்பிட்டார். ஒவ்வொரு கூட்டத்திலும் உ.பி.யின் சட்டம் ஒழுங்கு நிலையின் வளர்ச்சியை குறிப்பிட்டு அவர், முதல்வர் யோகியைப் பாராட்டினார். அப்போது, ‘நமது யோகிஜி’, ‘எனது யோகிஜி’ என உரிமையுடன் குறிப்பிட்ட பிரதமர் மோடி பெருமிதம் கொண்டார்.

இதுபோன்ற காட்சிகள், பிரதமர் மோடிக்கும், முதல்வர் யோகிக்கும் இடையே மோதல் இருப்பதாக எழுந்த புகார்களை பொதுமக்களிடம் மறக்கடிக்கச் செய்து விட்டதாகக் கருதப்படுகிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் முதல்வர் யோகி நடத்திய மொத்த கூட்டங்கள் 205. இவற்றில் உ.பி.யின் 80 மக்களவை தொகுதிகளிலும், அதன் முக்கியத் தொகுதிகளில் கூடுதலாகவும் என 159 கூட்டங்கள் இருந்தன. இத்துடன், 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 12 வெளிமாநிலங்களின் பிரச்சாரக் கூட்டங்களிலும் முதல்வர் யோகி, பிரதமர் மோடிக்காக வாக்கு சேகரித்தார். இருவரும் ஒன்றாக அமர்ந்த மேடைகளில், பிரதமர் மோடியுடன் வலதுபுறமாகவே அமர்ந்தார் முதல்வர் யோகி.

இதனால், முதல்வர் யோகியை பிரதமர் மோடியின் நிழல் எனவும் பாஜகவினர் பேசத் துவங்கி இருந்தனர். எனினும், இந்த இரண்டு பாஜக தலைவர்களின் உழைப்பின் வெற்றி, மக்களவை தேர்தலில் கேள்விக்குறியாகி விட்டது என்று பாஜகவினர் கருதுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x