Published : 01 Jun 2024 06:25 PM
Last Updated : 01 Jun 2024 06:25 PM

“கருத்துக் கணிப்பு விவாதத்தில் பங்கேற்பு” - இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன?

புதுடெல்லி: "இந்த மக்களவைத் தேர்தல் இண்டியா கூட்டணி குறைந்தது 295 இடங்களைக் கைப்பற்றும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். மேலும், “இண்டியா கூட்டணி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு விவாதங்களில் பங்கேற்க முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் நெருங்கி வரும் நிலையில், வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பாக இண்டியா கூட்டணி கட்சிகள் தங்களின் முக்கியமான வியூகக் கூட்டத்தை டெல்லியில் சனிக்கிழமை நடத்தினர்.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால், சமாஜ்வாதி கட்சி சார்பில் அதன் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத் பவார், ஜிதேந்த்ர அவஹத், ஆம் ஆத்மி கட்சி சார்பில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சஞ்சய் சிங், ராகவ் சந்தா, திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆர்ஜேடி சார்பில் தேஜஸ்வி யாதவ், சஞ்சய் யாதவ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில், சம்பை சோரன் மற்றும் கல்பனா சோரன், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் சார்பில் சீதாராம் யெச்சூரி, உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் அனில் தேசாய், சிபிஐ (எம்எல்) சார்பில் தீபங்கர் பட்டாச்சாரியா, விஐபி சார்பில் முகேஷ் ஷகானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்கே, "இந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். எங்கள் கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. நாங்கள் ஒன்றாக உள்ளோம். எங்களைப் பிரிக்கும் வேலையைச் செய்யாதீர்கள். இண்டியா கூட்டணி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு விவாதங்களில் பங்கேற்க முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மற்றும் கடந்த வாரம் மேற்கு வங்கம் வழியாக கடந்து சென்ற ரீமல் புயல் பாதிப்பு நிவாரண பணிகள் காரணமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

முன்னதாக, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தொடர்புடைய விவாதத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி மறுத்து இருந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை என்று காங்கிரஸ் கட்சிக் கூறி இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தோல்வியை இப்போதே ஏற்றுக்கொண்டு விட்டதாக பாஜக கேலி செய்துள்ளது.

திடீர் திருப்பம்: இந்த நிலையில், இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன்கெரா தனது எக்ஸ் பக்கத்தில், "இண்டியா கூட்டணி கட்சிகள் கூடி, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜகவை அம்பலப்படுத்த முடிவு செய்துள்ளன. கருத்துக் கணிப்பு விவாதத்தில் பங்கேற்கும் சாதக, பாதகங்களை கருத்தில் கொண்டு அனைத்து இண்டியா கூட்டணிக் கட்சிகளும் கருத்துக் கணிப்புக்கு பிந்தைய விவாதத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடந்த இந்தக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மை எண்ணிக்கையை பெறாது என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 260 - 270 இடங்களுக்கு அதிகமாக பெறாது என்று காங்கிரஸ கட்சி நம்புகிறது.

கூட்டத்துக்கு முன்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "போட்டி இன்னும் முடிவடையவில்லை. அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கிறார்கள். இந்த 2024 மக்களவைத் தேர்தலில் நாங்கள் எங்கள் முழு பலத்துடன் போராடினோம், இந்திய மக்கள் எங்களை ஆதரித்தது போல நேர்மையான முடிவுகள் வரும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x