Published : 31 May 2024 04:25 AM
Last Updated : 31 May 2024 04:25 AM

கனடா கல்லூரியில் சீட்டு வாங்கித் தருவதாக இந்திய மாணவர்களை ஏமாற்றிய முகவருக்கு 3 ஆண்டுகள் சிறை

புதுடெல்லி: கனடா நாட்டில் உயர்கல்வி படிக்க போலி அனுமதிச் சீட்டு விநியோகித்து இந்திய மாணவர்களை ஏமாற்றி வந்த இந்திய முகவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து கனடா நீதிமன்றம் உத்தரவிட்டது.

ப்ரிஜேஷ் மிஸ்ரா (37) என்பவர் தன்னை குடியேற்றப்பிரிவு முகவர் என கூறிக்கொண்டு பஞ்சாப் மாநிலத்தில் அலுவலகம் நடத்தி வந்தார். கனடா நாட்டின் முன்னணி கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் படிக்கும் கனவோடுஇருக்கக்கூடிய எளிய குடும்பப்பின்னணி கொண்ட மாணவர்கள்தான் இவரது இலக்கு. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டுகனடா சென்று பட்டப்படிப்பு படிக்க துடிக்கும் மாணவர்களின் குடும்பத்தினர் இவரை நம்பி அணுகினர். அப்படி தன்னிடம் சிக்கிய மாணவர்கள் ஒரே நேரத்தில் கனடாவில் உள்ள பல உயர்கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கும்படி ஆலோசனை வழங்குவார். ஆனால், அந்த மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிக்காமல் தன் வழியாக விண்ணப்பம் செய்ய ஏற்பாடு செய்வார்.

இதனையடுத்து சம்மந்தப்பட்ட மாணவர்களின் பாஸ்போர்ட் விவரம், அயல்நாடுகளில் படிக்க அவசியமான ஆங்கில மொழி தேர்ச்சி சான்றிதழ் உள்ளிட்டவற்றை கையகப்படுத்துவார்.

பிறகு கனடாவில் உள்ள பிரபல கல்லூரியில் சேர்க்கை உறுதி செய்யப்பட்டுவிட்டதாகக் கடிதம் விநியோகம் செய்வார். தான் செய்து முடித்த இந்த வேலைகளுக்கெல்லாம் சேர்த்து கட்டணம் வசூலிப்பார். ரசீது இல்லாமல் ரொக்கமாக மட்டுமே பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.

கடைசியில் சம்மந்தப்பட்ட மாணவர்கள் கனடா சென்றடைந்த பிறகு தங்களுக்கு உரிய கல்லூரி அல்லது பல்கலையில் அனுமதி கிடைக்கவில்லை என்பது தெரியவரும். இப்படி கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து 2020 வரை இந்தியாவிலிருந்து கனடாவுக்கு உயர்கல்வி படிக்க வந்த 12 சர்வதேச மாணவர்களை ப்ரிஜேஷ் மிஸ்ரா ஏமாற்றியதை கனடா எல்லை சேவைகள் நிறுவனம் கடந்த2023-ம் ஆண்டில் கண்டறிந்தது.

தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கனடா காவல்துறையிடம் கனடாவில் உள்ள சர்ரே நகரில் 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ப்ரிஜேஷ் பிடிபட்டார். கடந்த ஓராண்டு காலம் காவலில் வைக்கப்பட்டிருந்தவர் நேற்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஏற்கெனவே ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்த நிலையில் அவரது தண்டனை காலம் மேலும் 19 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x