Published : 30 May 2024 07:13 PM
Last Updated : 30 May 2024 07:13 PM

தொடங்கியது தென்மேற்கு பருவமழை: எங்கெல்லாம் மழை வாய்ப்பு?

புதுடெல்லி: தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது. நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மேகாலயா, அசாம் ஆகிய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா, தெலங்கானா, ராயலசீமா ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: தென்மேற்கு அரபிக் கடலின் எஞ்சிய பகுதிகள், மேற்கு மத்திய அரபிக் கடலின் சில பகுதிகள், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதி, கேரளா, மாஹே ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகள், தெற்கு தமிழ்நாட்டின் சில பகுதிகள், மாலத்தீவுகளின் எஞ்சிய பகுதிகள், வடகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள், திரிபுரா, மேகாலயா, அசாம் ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று (மே 30) தொடங்கியுள்ளது.

மத்திய அரபிக் கடலின் இன்னும் சில பகுதிகள், தெற்கு அரபிக் கடலின் எஞ்சிய பகுதிகள், லட்சத்தீவு பகுதி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், தமிழ்நாட்டின் இன்னும் சில பகுதிகள், தென்மேற்கு, மத்திய, வடகிழக்கு வங்கக்கடலின் மீதமுள்ள பகுதிகள், அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், சிக்கிம் ஆகியவற்றின் சில பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.

வடகிழக்கு அசாம் மற்றும் சுற்றுப்புறங்களில் குறைந்த வெப்பமண்டல மட்டத்தில் ஒரு புயல் சுற்று அமைந்துள்ளது. வங்கக்கடலில் இருந்து குறைந்த வெப்பமண்டல மட்டத்தில் உள்ள வடகிழக்கு மாநிலங்கள் வரை வலுவான காற்று தென்மேற்கு / தெற்கு திசை காற்று வீச வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கத்தால், அருணாச்சல பிரதேசம், அசாம் & மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் & திரிபுரா, மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கி.மீ) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 5 நாட்களில் அருணாச்சல பிரதேசம், அசாம் & மேகாலயா, மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்யக்கூடும். மேகாலயாவில் இன்று மிகப் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்னிந்திய தீபகற்பம், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் சறுக்குப் பெயர்ச்சி அழுத்தம் நிலவுவதால், கேரளா, மாஹே, லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30-40 கி.மீ) கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா, தெலங்கானா, ராயலசீமா ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மழை பெய்யக்கூடும்.

பஞ்சாப் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள், ஹரியானா, சண்டிகர், டெல்லி ஆகியவற்றின் பல பகுதிகள், ராஜஸ்தான், பிஹார், கிழக்கு மத்தியப் பிரதேசம் ஆகியவற்றின் சில பகுதிகள், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சில பகுதிகள் ஆகியவற்றில் இன்று கடுமையான வெப்ப அலை வீசியது. நேற்று ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் நாட்டிலேயே மிக அதிகபட்சமாக 48.8 டிகிரி செல்சியஸ் (119.84 பாரன்ஹீட்) வெப்பம் பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x