Published : 30 May 2024 06:19 AM
Last Updated : 30 May 2024 06:19 AM

ரூ.8,500 வரவு வைப்ப‌தாக வதந்தி: பெங்களூருவில் அதிகாலை அஞ்சல‌கத்தில் குவிந்த பெண்கள்

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் (ஐபிபிபி) சேமிப்பு வங்கிக் கணக்கு களில் அரசு சார்பில் தலா ரூ.8 ஆயிரம் செலுத்தப்படுவதாக கர்நாடகாவில் வதந்தி பரவியது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஐபிபிபி சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக நேற்று குவிந்த பெண்கள். படம்: பிடிஐ

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு தலைமை அஞ்சல் அலுவலகத்தின் தலைமை அதிகாரி மஞ்சேஷ்கூறியதாவது:

கடந்த 10 நாட்களாக சேமிப்புகணக்கு தொடங்குவதற்காக ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண்கள் அதிக எண்ணிக்கையில் அஞ்சலகம் வருகின்றனர்.

கடந்த 6 மாதங்களில் தினமும் சராசரியாக 100 முதல் 200 கணக்குகளைத் தொடங்கினோம். ஆனால் கடந்த இரு வாரங்களாக பெங்களூரு தலைமை அஞ்சலகத்தில் மட்டும் தினமும் 700 முதல் 800கணக்கு தொடங்கியுள்ளோம்.

அதிகாலை 3 மணி முதல்.. இதனால் அஞ்சலகத்தில் கூட்டம் தென்படுகிறது. அதிலும் கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களில் அதிகாலை 3 மணி முதல் பெண்கள் அஞ்சலகத்துக்கு வர தொடங்கி விடுகின்றனர். பெங்களூருவின் ஊரகப் பகுதியில் இருந்து வரும் சிலர் இங்கேயே பாய் விரித்து படுத்து விடுகின்றனர்.

திங்கள்கிழமை பிற்பகலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இங்கு குவிந்ததால், போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினோம்.

இதுகுறித்து பெண்களிடம் விசாரித்தோம். தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பெண்களின் அஞ்சலகக் கணக்கில் ரூ.8,500 வரவு வைக்க இருப்பதாக வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி வந்தது என்றும் அதன் அடிப்படையில் அஞ்சலக சேமிப்பு கணக்கை தொடங்குகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த தகவலை மறுத்து அஞ்சலகத்தின் முன்பாகவே, பேனர் மற்றும் போஸ்டர் ஒட்டியுள்ளோம். ஆனாலும் பெண்கள்கூட்டம் கூட்டமாக அஞ்சலகத்தில் குவிந்து வருகின்றனர். இவ்வாறுஅஞ்சல் அலுவலகத்தின் தலைமை அதிகாரி மஞ்சேஷ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x