Published : 22 May 2024 05:50 PM
Last Updated : 22 May 2024 05:50 PM

மேற்கு வங்கத்தில் 2010-க்குப் பின் வழங்கப்பட்ட அனைத்து ஓபிசி சான்றிதழ்களும் ரத்து: கொல்கத்தா ஐகோர்ட்

கொல்கத்தா உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2010-க்குப் பின் வழங்கப்பட்ட அனைத்து ஓபிசி சான்றிதழ்களும் ரத்து செய்யப்படுவதாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் தவிர) (சேவைகள் மற்றும் பதவிகளில் காலியிடங்கள் இடஒதுக்கீடு) சட்டம், 2012-க்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு மனுக்கள் மீது நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, இந்த வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தபப்ரதா சக்ரவர்த்தி மற்றும் ராஜசேகர் மந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பினை வழங்கியது.

அந்தத் தீர்ப்பில், "மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் தவிர) (சேவைகள் மற்றும் பதவிகளில் காலியிடங்கள் இடஒதுக்கீடு) சட்டம், 2012ன் கீழ், 42 பிரிவினர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். அந்தப் பிரிவுகளில் பல பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன. 2010-ஆம் ஆண்டுக்கு முன் 66 ஓபிசி வகுப்பினரை வகைப்படுத்தும் மாநில அரசின் நிர்வாக உத்தரவுகளில் நீதிமன்றம் தலையிடவில்லை. ஏனெனில், அவற்றுக்கு எதிராக வழக்கு தொடரப்படவில்லை.

மார்ச் 5, 2010 முதல் மே 11, 2012 வரை 42 வகுப்புகளை ஓபிசி-களாக வகைப்படுத்தும் மாநில அரசின் நிர்வாக உத்தரவு சட்டவிரோதமானது. எனவே, மார்ச் 5, 2010-க்குப் பிறகு இந்த 42 பிரிவினருக்கு வழங்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான சான்றிதழ்களும் ரத்து செய்யப்படுகின்றன. அதேநேரத்தில், ஏற்கெனவே பணியில் உள்ள அல்லது இடஒதுக்கீட்டின் பலனைப் பெற்ற அல்லது அரசின் எந்தத் தேர்விலும் வெற்றி பெற்றவர்கள் இந்த தீர்ப்பால் பாதிக்கப்பட மாட்டார்கள்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையச் சட்டம், 1993-ன் கீழ், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கருத்தும் ஆலோசனையும் மாநில சட்டமன்றத்தைக் கட்டுப்படுத்தும். மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, தேசிய ஆணையத்துடன் கலந்தாலோசித்து, புதிய வகுப்புகளைச் சேர்ப்பது அல்லது மீதமுள்ள வகுப்பினரை ஓபிசிகளின் மாநிலப் பட்டியலில் சேர்ப்பது குறித்த பரிந்துரைகளுடன் சட்டமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தத் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்றும், இதர பிற்படுத்தப்பட்டார் இட ஒதுக்கீடு தொடரும் என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். "மேற்கு வங்க அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓபிசி இடஒதுக்கீடு தொடரும். வீடு வீடாக ஆய்வு நடத்தி மசோதாவை நாங்கள் தயாரித்துள்ளோம், அது அமைச்சரவை மற்றும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இது பாஜகவின் சதி. மத்திய அமைப்புகளைப் பயன்படுத்தி அதை முடக்க பாஜக சதி செய்துள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x