Published : 20 May 2024 01:07 PM
Last Updated : 20 May 2024 01:07 PM

அரசியலமைப்புச் சட்டம்தான் எனது வேதம்: நரேந்திர மோடி @ ஒடிசா

ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி

தென்கனல்(ஒடிசா): அரசியல் அமைப்புச் சட்டம்தான் ஆட்சிக்கான மிகப்பெரிய வேதம் என்றும், அதுதான் தனது வழிகாட்டி என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் தென்கனல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, “இன்று (மே 20) நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏராளமான வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது கடமைகளைச் செய்து வருகின்றனர். அனைத்து வாக்காளர்களையும், குறிப்பாக அனைத்து முதல்முறை வாக்காளர்களையும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த தேர்தல் நேரத்தில் உலக வல்லுநர்கள் பலர், நாடு முழுவதும் வலம் வருகின்றனர். இந்திய வாக்காளர்களின் துடிப்பை அவர்கள் உணர்ந்துள்ளார். மோடி அரசை மூன்றாவது முறையாக மீண்டும் கொண்டு வர மக்கள் அனைவரும் விரும்புவது, அவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் நம் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து ஒரு வித்தியாசமான உற்சாகத்தைக் காண்கிறேன். ஒடிசாவின் ஒவ்வொரு கிராமம் மற்றும் தெருவில் இருந்தும் ஒரே மாதிரியான குரல் வருகிறது - ஒடிசாவில் முதல் முறையாக இரட்டை இயந்திர அரசு. இதுதான் அந்த குரல்.

நீங்கள் 25 ஆண்டுகளாக பிஜூ ஜனதா தள(பிஜேடி) அரசாங்கத்தை நம்பி வருகிறீர்கள். இந்த ஆண்டுகளில் ஒடிசா மக்களுக்கு என்ன கிடைத்தது என்று ஒடிசா முழுவதும் தற்போது சுயபரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது. நான் குஜராத்தில் இருந்து வந்துள்ளேன். சோமநாதரின் தேசத்தில் இருந்து ஜெகந்நாதரின் தேசத்திற்கு எனது வணக்கத்தைச் செலுத்த வந்துள்ளேன். ஆனால், ஒடிசாவில் ஏழ்மையைக் காணும்போது, ​​இவ்வளவு வளமான மாநிலமாகவும், மகத்தான பாரம்பரியத்தைக் கொண்ட என் ஒடிசாவை அழித்தவர் யார் என்று என் இதயத்தில் வலி ஏற்படுகிறது.

ஊழல்வாதிகளின் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ள பிஜேடி அரசுதான் இதற்கு காரணம். ஒரு சில ஊழல்வாதிகள் முதல்வர் இல்லம் மற்றும் அலுவலகத்தை கைப்பற்றியுள்ளனர். பிஜேடியின் சிறு தலைவர்கள் கூட கோடிகளுக்கு சொந்தக்காரர்களாகிவிட்டனர். பிஜேடி ஆட்சியில் ஒடிசாவின் செல்வம் பாதுகாப்பாக இல்லை. ஒடிசாவின் கலாச்சார பாரம்பரியமும் பாதுகாப்பாக இல்லை. ஜகன்னாதர் கலாச்சாரத்திற்காகப் பல பணிகளைச் செய்த பத்ம விருது பெற்ற அந்தர்யாமி மிஸ்ராவின் பூமி இது. ஆனால் பிஜேடி அரசாங்கத்தின் கீழ் ஜெகன்னாதரின் கோயில் கூட பாதுகாப்பாக இல்லை.

பிஜேடி ஆட்சி ஒடிசாவுக்கு எதையும் வழங்கவில்லை. சிறந்த வாழ்க்கை வாழ விவசாயிகளும், இளைஞர்களும், ஆதிவாசிகளும் இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆதிவாசி மக்கள் வாழம் இடங்கள் வளமிகுந்தவை. ஆனால், அவர்கள் ஏழ்மையின் பிடியில் இருக்கிறார்கள். ஒடிசாவை அழித்தவர்களை மன்னிக்கக்கூடாது.

நீங்கள் இங்கு பாஜகவின் ஆட்சியை அமைக்கப் போகிறீர்கள். ஒடிசாவின் மகன் அல்லது மகளை மட்டுமே பாஜக முதல்வராக்கும். ஒடிசாவில் ஜூன் 10ஆம் தேதி பாஜகவின் இரட்டை இயந்திர ஆட்சியின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஏனெனில், பிஜேடி அரசு விலகுவது உறுதி.

21ஆம் நூற்றாண்டின் ஒடிசாவுக்கு, வளர்ச்சி வேகம் தேவை. பிஜேடி அரசாங்கம் எந்த சூழ்நிலையிலும் வேகமான வளர்சசியைக் கொடுக்க முடியாது. பிஜேடியின் தளர்வான கொள்கைகள், தளர்வான வேலைகள் மற்றும் மெதுவான வேகத்தை விட்டுவிட்டு, பாஜகவின் வேகமான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டமே ஆட்சிக்கான மிகப்பெரிய வேதம். அரசியல்வாதியாகவும், மக்கள் பிரதிநிதியாகவும் எனக்கு அரசியல் சட்டம்தான் வழிகாட்டி" என தெரிவித்தார். முன்னதாக, புரி சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஜகந்நாதரை வழிபட்டார். இதையடுத்து, புரியில் நடைபெற்ற ரோட் ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x